/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஒரு விநாடி போதும் அதிசயம் நிகழ்த்துவார் அற்புத நாராயணர்
/
ஒரு விநாடி போதும் அதிசயம் நிகழ்த்துவார் அற்புத நாராயணர்
ஒரு விநாடி போதும் அதிசயம் நிகழ்த்துவார் அற்புத நாராயணர்
ஒரு விநாடி போதும் அதிசயம் நிகழ்த்துவார் அற்புத நாராயணர்
ADDED : செப் 25, 2012 10:12 AM

கணப்பொழுது வணங்கினாலும் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் அற்புத நாராயணர் கோட்டயம் அருகிலுள்ள திருக்கடிதானத்தில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு:
சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் இப்பகுதியை ஆண்டு வந்தான். இவனது நந்தவனத்தில், தேவலோகத்தில் இல்லாத அரிய மலர்கள் பூத்தன. இவற்றைத் தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள்மன்னனிடம் முறையிட் டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து பூமியிலேயே தங்க வேண்டியதாயிற்று. தேவலோகம் திரும்ப என்ன வழி என மன்னன் கேட்க, ''நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் நாங்கள் வானுலகம் செல்ல முடியும்,''என தேவர்கள் கூறினர். மன்னனும் தானமாக அளித்தான். தேவர்கள் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் நடந்தது. அதன் அடிப்படையில் இத்தலத்திற்கு 'திருக்கடித்தானம்' என பெயர் வந்தது.
சகாதேவன் பிரதிஷ்டை:
இத்தலத்திற்கு பாண்டவர்களின் கடைசித்தம்பியான சகாதேவன் வந்துள்ளான். பெருமாளை பூஜை செய்ய விரும்பினான். விக்ரகம் கிடைக்கவில்லை. மனம் வருந்திய அவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றபோது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததன் காரணமாக இத்தல பெருமாள் 'அற்புத நாராயணன்' எனப்படுகிறார். சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது. தாயாருக்கு கற்பகவல்லி நாச்சியார் என்பது திருநாமம்.
சிறப்பம்சம்:
இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்றும் கூறுகிறார்கள். சுற்றுப்பிரகாரத்தில் சாஸ்தா, சுப்பிரமணியர், நாகர் விக்ரகங்கள் உள்ளன. இத்தலத்து பிரமாண்டமான கோட்டைசுவர்கள் பூதங்களால் கட்டப்பட்டது என்கிறார்கள்.
பெயர்க்காரணம்:
'கடி' என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்தது. 'கடிகை' என்பது குறைந்த நேரத்தைக் குறிக்கும். தூய்மையான மனத்துடன் இறைவனை ஒரு விநாடி பிரார்த்தனை செய்தால் கூட, எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மனித உடல்:
கோயிலின் முன் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின் மேல் வைக்கப்பட்டுள் ளது. அதற்கு ஒரு புராணக்கதை உள்ளது. ஒருமுறை இப்பகுதியை ஆண்ட ராஜா கோயிலுக்கு வந்தார். அப்போது நடை சாத்தப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலன், வந்தவர் ராஜா என அறியாமல், அவரிடமே பணம் வாங்கிக் கொண்டு நடையைத் திறந்து விட்டான். கோபமடைந்த ராஜா அவனுக்கு மரணதண்டனை விதித்தார். மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவனது உடலை கோயில் வாசல் முன் வைத்துவிட்டார். இப்போது, அதே அடையாளத்திற்காக கல்சிலை உள்ளது. (தமிழகத்தில் கோயில் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கும் இதே போல் தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்குமே!)
தலப்பெருமை:
வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனி கொடிமரம் உள்ளது. நரசிம்மரின் உருவம் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களை ஒரு பலகணி துவாரம் (மரஜன்னல்) வழியாக தரிசிக்கலாம்.
நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தை குறைப்பதற்காக பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. பூஜையின் போது 'நாராயணீயம்' சொல்லப்படுகிறது. பெருமாள் கருவறைக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்தக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
இருப்பிடம்:
கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் 21 கி.மீ., தூரத்தில் செங்கணாச்சேரி. இங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 5- 11, மாலை 5-இரவு 8.
போன்:
0481 244 8455.