/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புயலே அடித்தாலும் பணிவு ஜெயிக்கும்
/
புயலே அடித்தாலும் பணிவு ஜெயிக்கும்
ADDED : பிப் 23, 2016 11:24 AM

* புயலடித்தால் வலிமையான மரம் கூட சாய்ந்து விடும். ஆனால் சிறு புல் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பணிவின் பெருமை இத்தகையது.
* பிறரை வணங்குவது பலவீனம் என்று நினைக்க வேண்டாம். நாம் புல்லையும் வணங்கும் பெருந்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.
* கோடரியால் தன்னை வெட்டுபவனுக்கும் பச்சை மரம் நிழல் தந்து உதவுகிறது. அது போல தன்னை துன்புறுத்துபவனும் இன்புற்று வாழ நினைப்பவனே உண்மையான ஆன்மிகவாதி.
* உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். இதுவே உண்மையான வழிபாடாகும். வாழ்வில் இன்பம், துன்பம் எது வந்தாலும் கடவுளின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
* வாழ்வில் இழந்த செல்வத்தைக் கூட சம்பாதித்து விட முடியும். ஆனால் இழந்து போன ஒரு நிமிட நேரத்தை சம்பாதிக்கவே முடியாது. காலம் பொன் போன்றது என்பதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
* நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி உண்டாகாது. விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நம்புவதைக் காட்டிலும் மனிதனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
* அன்பு மிக்க கடவுளே தீமைகளைக் களைவதற்காக கோர வடிவிலும் காட்சியளிக்கிறார். இரண்யகசிபுவிடம் சீறிப் பாய்ந்த நரசிம்ம மூர்த்தியே பக்த பிரகலாதனைக் கண்டதும் சாந்தம் அடைந்தார்.
* சுயநலமும், ஆணவமும் உள்ளவர்கள் கடவுளை நெருங்கவே முடியாது. எளிமையும், தூய்மையும் மிக்கவர்கள் மனம் ஒன்றி வழிபடும் போது கடவுளின் அருளுக்கு பாத்திரமாகி விடுகிறார்கள்.
* கண்ணை மூடித் திறப்பதற்குள் கிணற்றில் குதித்து விடலாம். ஆனால், மேலே ஏறி வர போராட வேண்டியிருக்கும். அதுபோல கடவுளின் கருணையைப் பெறுவது கடினம். அதை இழப்பதற்கு ஒரு நிமிடம் போதும்.
* எல்லாம் கடவுள் செயல் என்று கூறிக் கொண்டு சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். கடவுள் அளித்த அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
* இன்று நண்பனாக இருப்பவன் நாளை எதிரியாக மாறலாம். ஆனால் நம்பிக்கைக்குரிய ஒரே நண்பர் கடவுள் மட்டுமே. இவரைச் சரணடைந்தால் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* ஆரம்ப காலத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். பக்தி பக்குவம் அடையும் போது பயம் அறவே நீங்கி விடும். இதையே பிரேமை பக்தி என்பார்கள்.
* கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பது கடவுளை திருப்திப்படுத்த அல்ல. இதன் மூலம் மனம் தூய்மை பெறுகிறது. மந்திரம் ஜெபிப்பதால் கடவுளுக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.
* கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருக்கிறது. அது போல மனதில் எழும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தவே விரதங்களை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
சொல்கிறார் அமிர்தானந்தமயி

