/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புரட்டாசி சனியன்று 12 முறை சுற்றுங்க!
/
புரட்டாசி சனியன்று 12 முறை சுற்றுங்க!
ADDED : செப் 08, 2017 09:36 AM

எட்டெழுத்து மந்திர வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழ் மதுரை கூடலழகர் வீற்றிருக்கிறார். இந்த விமானத்தை புரட்டாசி சனியன்று 12 முறை சுற்றினால் கைமேல் பலன் கிடைக்கும்.
தல வரலாறு: பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர், மனித வடிவில் திருமாலை தரிசிக்க எண்ணி பூலோகத்தில் தவமிருந்தார். அவருக்கு அருள்புரிய திருமாலும் தேவியருடன் காட்சியளித்தார். தேவசிற்பி விஸ்வகர்மா மூலம் அத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்து கோயில் கட்டினார் சனத்குமாரர். இவர் மதுரையில் 'கூடலழகர்' என்னும் திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
12 முறை சுற்றுங்க!: எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' வடிவத்தில் இருப்பது அஷ்டாங்க விமானம். இங்கு 125 அடி உயரத்தில் இந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளுடன் எட்டு பகுதிகளைக் கொண்ட இதன் நிழல் கீழே விழாது. இதை புரட்டாசி சனிக்கிழமையில்
12 முறை சுற்றி வர நினைத்தது நிறைவேறும்.
மூன்று கோலங்கள்: விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் அமர்ந்தகோலத்தில் தேவியருடன் காட்சியளிக்கிறார். இரண்டாவது நிலையில் சூரியநாராயணர் நின்ற நிலையிலும், மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர் பள்ளி கொண்ட நிலையிலும் உள்ளனர். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களை விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். திருமாலே பரம்பொருள் என்பதை நிரூபித்தவர் பெரியாழ்வார். இவர் இத்தலத்தில் பாடிய 'திருப்பல்லாண்டு' பாடலே அனைத்து பெருமாள் கோயில்களிலும் தினமும் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இத்தலத்தை தரிசித்தாலும், மனதால் நினைத்தாலும், 'வாழ்க பல்லாண்டு' என்று கூடலழகர் வரம்
அளிப்பது திண்ணம்.
மீன் சின்னம்: சத்திய விரதன் என்னும் மன்னன் வைகையின் துணைநதியான கிருதுமால் ஆற்றில் மன்னன் நீராடிய போது பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் அளித்தார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மீன் சின்னத்தை ஏற்றுக் கொண்டான். இதன் அடிப்படையில் பாண்டியரின் அரசு
சின்னமாக மீன் விளங்குகிறது.
எப்படி செல்வது: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ளது.
விசேஷ நாட்கள்: புரட்டாசி சனி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு : 0452 - 233 8542
அருகிலுள்ள தலம்: அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் மதுரையில் இருந்து 20 கி.மீ.,