sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

/

ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை


ADDED : நவ 05, 2010 03:39 PM

Google News

ADDED : நவ 05, 2010 03:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை நடக்கும் தலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலுள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலாகும். கந்தசஷ்டியை ஒட்டி இங்கு சென்று வாருங்கள்.

தல வரலாறு: நமுசி என்ற அசுரன், எத்தகைய ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். எனவே, தேவர் தலைவன் இந்திரன், தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், கடல்  நுரையை எடுத்து அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். அசுரன் பெற்ற வரத்தின்படி, ஆயுதங்களால் தான் அவனுக்கு அழிவு உண்டாகாது. கடல் நுரையை ஆயுதமாக கருத முடியாதென்பதால், அசுரனை அழிக்க சிவன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்தார். அதன்படி, இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு 'இந்திர லிங்கம்' என்றும் பெயருண்டு. காலப்போக்கில் இவரது பரிவார மூர்த்தியாக எழுப்பப்பட்ட முத்துக்குமார சுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால், இவர் பிரசித்தி

பெற்று விட்டார். கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

இழந்ததைப் பெற பூஜை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறார். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது. இழந்த பொருள் மீண்டும் கிடைக்கவும், பதவியிறக்கம், வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, சம்பா சாதம் அல்லது பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.

விசேஷ பிரம்மா: இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி அருள் பெற்றான். எனவே,  இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். கார்த்திகை திங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பிரம்மா நின்ற நிலையில்தான் இருப்பார். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிக விசேஷம். அருகிலுள்ள துர்க்கை எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.

தேன் பிரசாதம்: முத்துக்குமாரருக்கு முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறுமுகங்கள் உள்ளன. இவர் இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில்  இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய் தோறும் இவருக்கு 'சத்ருசம்ஹார திரிசதி' அர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே  தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் இவருக்கு பிரதானமாக தேன் படைத்து, அதையே பிரசாதமாகத் தருவர். மலையில் பிறந்த வள்ளியின் கணவர் என்பதன் அடிப்படையில், தேன் படைக்கின்றனர்.

திருவிழா விசேஷம்: விழாக்காலங்களில் முருகப்பெருமான் அவருக்குரிய ஆடு, மயில் வாகனங்கள் தவிர, சிவனுக்குரிய  ரிஷபம் மற்றும் இந்திரனுக்குரிய ஐராவதம் யானையிலும் பவனி வருவார். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமென்பதால், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக, சுவாமி இவ்வாறு பவனி வருவதாகச் சொல்கின்றனர். முருகனின் அருள்பெற்ற இடும்பனும் இங்கு வாகனமாக இருக்கிறார். இவர் மீதும் சுவாமி பவனி செல்வார். கந்தசஷ்டி விழாவின்போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்

பூசத் திருவிழாவின்போது வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

அமாவாசை பூஜை: முன் மண்டபத்தில் 18 படிகளுடன் ஐயப்பன் சன்னதி உள்ளது. தமிழ் மாத பிறப்பு நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அப்போது சுவாமி பிரகார வலம் வருவார். முன் மண்டபத்தில் உள்ள நடராஜர், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என வருடத்தில் இருமுறை புறப்பாடாவார். வழக்கமாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில்தான் விசேஷ பூஜை நடக்கும். இங்கு, அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் கீழே ஐந்து நாகங்களுடன் நாகராஜா சன்னதி உள்ளது. இருபுறமும் இரண்டு நாக கன்னிகள் உள்ளனர். நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.  பிரகாரத்தில் ஆதிவிநாயகர், பாலசுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இமயமலையில் இருப்பதாகச் சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாதைய்யர் இக்கோயிலில்தான் அர்ச்சகராக பணியாற்றினார். இங்கிருந்து சற்று தூரத்தில் பாபாஜி கோயில் உள்ளது.

இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் இருக்கிறது.

திறக்கும் நேரம்: காலை 8- மதியம் 12 மணி, மாலை 5- இரவு 8 மணி.

போன்: 84184 11058, 98940 48206.

 






      Dinamalar
      Follow us