ADDED : செப் 30, 2020 06:28 PM

காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியம் வேண்டுமா! புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலுக்குச் செல்லுங்கள். இந்தக் கோயிலை குலோத்துங்க சோழன் பதினோராம் நுாற்றாண்டில் கட்டினார். 'குலோத்துங்க சோழீஸ்வரம்' எனப்பட்ட இக்கோயில் நாளடைவில் 'சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்' என மாறியது. தற்போது 'சாந்தநாத சுவாமி கோயில்' எனப்படுகிறது. கிழக்கு நோக்கியிருக்கும் இவரை தரிசிப்பவருக்கு குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் இருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியான அம்பிகை 'வேதநாயகி' என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். கல்விக்கடவுளான இந்த அம்மனை வியாழக்கிழமையில் வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வர்.
காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர் - பர்வதவர்த்தினி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றினால் பிதுர் தோஷம், பாவம் நீங்கும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது.
துர்கையம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10:30 - 12:00 மணி) குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை அகலும். இங்குள்ள சர்க்கரை விநாயகர் கடன் பிரச்னையை தீர்ப்பார் என்பதால் பக்தர்களே சர்க்கரையால் அபிஷேகம் செய்கின்றனர். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரக தோஷம் விலகும். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், அறுபத்து மூவர் சன்னதிகள் உள்ளன.
பல்லவன் குளக்கரையில் உள்ள பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயருக்கு 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் திருமணத்தடை விலகும். வடைமாலை சாத்தினால் விருப்பம் நிறைவேறும்.
எப்படி செல்வது: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம்
நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 மணி; மாலை 4:30 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 99420 75863
அருகிலுள்ள தலம்: புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயில்