sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலையெழுத்தை மாற்றும் தலைக்காடு சிவன்!

/

தலையெழுத்தை மாற்றும் தலைக்காடு சிவன்!

தலையெழுத்தை மாற்றும் தலைக்காடு சிவன்!

தலையெழுத்தை மாற்றும் தலைக்காடு சிவன்!


ADDED : ஜூன் 21, 2018 04:13 PM

Google News

ADDED : ஜூன் 21, 2018 04:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாள் கோயில் போல மைசூரு அருகிலுள்ள தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் சொர்க்க வாசல் உள்ளது. இவரை தரிசித்தால் நம் தலையெழுத்து மாறி நல்வாழ்வு அமையும்.



தல வரலாறு: சோமதத்த முனிவர் கைலாய பதவி பெற விரும்பி சிவனை வழிபட்டார். கனவில் தோன்றிய சிவன், ''சோமா! கஜாரண்யம் என்னும் காட்டிற்கு சென்று என்னை பூஜித்து வா! எண்ணம் நிறைவேறும்,” என்றார். யானைகளின் இடையூறால், முனிவரால் தவம் செய்ய முடியவில்லை. எனவே முனிவரும் ஒரு யானையாக மாறி தவம் செய்து வந்தார். ஒருநாள் தலா, காடன் என்னும் இரண்டு வேடர்கள் யானை வேட்டைக்கு வந்தனர். யானை வடிவில் இருந்த முனிவரைப் பிடிக்க குறி வைத்தனர். ஆனால், குறி தவறிய அம்பு அருகிலுள்ள புற்றில் பாய்ந்தது. அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அப்போது அசரீரியாக,''வேடர்களே! இந்த புற்றில் லிங்க வடிவில் நான் இருக்கிறேன். அம்புபட்ட என் மேனியில் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள்,” என்றார் சிவன். வேடர்களும் அப்படியே செய்ய, சிவன் நேரில் காட்சியளித்து வேடர்களுக்கும், யானையாக இருந்த முனிவருக்கும் கைலாய பதவியளித்தார். இவரே இத்தலத்தில் 'வைத்தியநாதர்' ஆக வீற்றிருக்கிறார்.

புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியதால் சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முகம் கவசமாக உள்ளது. ஐந்து தலை நாகாபரணத்தை சூடியிருக்கும் இவரை தரிசித்து தீர்த்தம் குடித்தால் நீண்டகால நோயும் தீரும். 'மிருத்திகா' என்னும் புற்றுமண் பிரசாதமாக தரப்படுகிறது.

கோபுர வாசல் தவிர 'கைலாய வாயில்' எனப்படும் சொர்க்கவாசலும் உள்ளது. பொங்கலன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக உலா செல்வர். கோயிலுக்கு திரும்பும் போது சொர்க்க வாசல் வழியாக உள்ளே நுழைவர். இந்த விழா 'சொர்க்க பாதல் தையலு' என அழைக்கப்படுகிறது.

அம்பிகை மனோன்மணி, இரு கைகளில் தாமரை மலரைத் தாங்கி நிற்கிறாள். மற்ற கைகள் வரத, அபய ஹஸ்தமாக உள்ளன. ஆடியில் முளைக்கொட்டு விழா நடக்கிறது. சக்தி கணபதி, பத்ரகாளி, கமடேஸ்வரர், அபய வெங்கட்ரமணர், மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் பஞ்சலிங்க சன்னதி வெளிப்பிரகாரத்தில் உள்ளது. சொர்க்கவாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. கோயிலில் சிற்பியாகப் பணியாற்றிய நாககுண்டலாச்சாரி தன் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் பாம்பாலான கல் சங்கிலியை உருவாக்கி உள்ளார். கோயில் அருகில் கல்யாணி தீர்த்தம் உள்ளது.

தலக்காட்டைச் சுற்றி காவிரியாறு நான்கு திசைகளிலும் வளைந்து திரும்புகிறது.

இவ்வூரின் கிழக்கில் சூரியன் வழிபட்ட அர்க்கேஸ்வரர், மேற்கில் அர்ஜுனன் வழிபட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர், வடக்கில் பிரம்மா வழிபட்ட சைகதேஸ்வரர், தெற்கில் வாசுகி வழிபட்ட பாதளேஸ்வரர் கோயில்கள் உள்ளன. நடுவில் தலக்காடு வைத்தியநாதர் கோயில் உள்ளது.

மூலவர் சன்னதி நுழைவாயிலின் இருபுறமும் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. நந்தி ஆண் கல்லினாலும், மகாகாளர் பெண் கல்லினாலும் வடிக்கப்பட்டுள்ளனர். நந்தியைத் தட்டினால் 'கண்டநாதம்' என்னும் மணியோசையும், மகாகாளரைத் தட்டினால் 'தாளநாதம்' என்னும் இனிய ஓசையும் கேட்கும். சிற்பக்கலைக்கு சான்றாக இது விளங்குகிறது.

இக்கோயிலில் விஜயகணபதி, குதிரையின் மீது போர் வீரர் போல வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். கல்வி முன்னேற்றத்துக்காக செம்பருத்திப்பூ வைத்து மாணவர்கள் வழிபடுகின்றனர்.

இந்த குதிரை வாகனத்தின் கால்களை மறைத்து விட்டு பார்த்தால் மூஞ்சூறு போல காட்சி தருவது அதிசயம்.

எப்படி செல்வது: மைசூரு - கொல்லேகால் சாலையில் 48 கி.மீ.,

விசேஷ நாட்கள்: வைகாசி பவுர்ணமியில் பிரத்யட்ச உற்ஸவம் என்னும் வைத்தியநாதர் ஜெயந்தி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, மகரசங்கராந்தி

நேரம்: காலை 6:30 - 1:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 98861 24419, 08227 - 273 413

அருகிலுள்ள கோயில்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்






      Dinamalar
      Follow us