ADDED : மே 02, 2023 03:14 PM
அறிவு, திறமை, அடக்கம், ஆரோக்கியம் சொல்லாற்றல் இசை, ஞானம், உடல்வலிமை, துணிவு, புகழ், அனைத்திற்கும் எடுத்துக்காட்டு அனுமன் என போற்றுவார் கம்பர். இவருக்கு இந்தியா முழுவதும் சிறப்புடைய கோயில்கள் இருந்தாலும் இவருடைய சகோதரரான பீமன் வடிவத்தில் காட்சி தரும் கோயில் ஒன்றுள்ளது தெரியுமா உங்களுக்கு.
ராமாயண அனுமனும், மகாபாரத பீமனும் வாயுவின் மகன்கள் என்பது தெரியும். பஞ்சபாண்டவர்களின் ஒருவரான பீமன் ஒரு முறை தோட்டத்தில் பூத்திருந்த அழகிய பூவை பறிக்க சென்றான். வழியில் சிரஞ்சீவியான அனுமன் வாலை நீட்டிப் படுத்திருந்தார். தான் பலசாலி என்ற ஆணவத்தில் வாலை நகர்த்த முயற்சித்தான். அவரது தலைக்கனத்தை முறியடித்து பீமனுக்கு தான் யார் என்பதை உணர்த்தினார் அனுமன்.
மன்னிப்பு கேட்டு கட்டித்தழுவிக் கொண்டான் பீமன். அந்த திருவிளையாடல் நிகழ்ந்த இடம் இது தான். அவர்களது வம்சத்தின் வழி வந்த ஜெனமேஜெயன் அவர்களுக்கு ஞாபகர்த்தமாக இங்கு கோயில் கட்டியுள்ளார். கர்நாடகாவில் காடமண்டலஹி கிராமத்தில் உள்ளது இக்கோயில். இங்கு குடி கொண்டு திகழும் இவரின் திருநாமம் காந்தேஷ் அனுமன் என்பதாகும்.
இவரை தரிசிப்பவர்களுடைய வாழ்வு ஜொலிக்கும். இங்கு இவருக்கு மதியத்திற்கு மேல் பீமனை போல் அலங்காரம் செய்கின்றனர். இது காலங்காலமாக உள்ள பழக்க வழக்கம். விஜய நகர அரசர்களின் பராமரிப்பில் இருந்த இக்கோயிலை இப்பகுதியில் வாழ்ந்த சேஷ கிருஷ்ணர் என்னும் அன்பர் திருப்பணிகள் பல செய்துள்ளார். கோயிலுக்கே உண்டான வரவேற்பு வளைவு, ராஜகோபுரம் பக்தர்களை கம்பீரமாக வரவேற்கின்றன.
இங்கு வாழ்ந்த படைத்தளபதியும், புலவருமாகிய கனகதாசரின் நோயினை தீர்த்து வைத்தார். ஏப்ரல் மாதத்தில் இவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கின்றன. கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடி ராம நாமம் சொல்லி, குங்குமம், வெற்றிலையால் அனுமனை அர்ச்சனை செய்து வழிபட்டு வர ஆயுள் கூடும். சகல நன்மைகளும் உண்டாகும்.
இக்கோயிலில் நடைபெறும் தெப்ப உற்ஸவம் பிரபலம். சீதா, ராமர், லட்சுமணர், கனகதாசர் சன்னதிகள் உள்ளன. தினசரி நடைபெறும் அன்னதானத்தில் பக்தர்கள் பலர் பங்கு கொள்கின்றனர்.
எப்படி செல்வது: பெங்களூருவில் இருந்து 372 கி.மீ.,
விசேஷ நாள்: அமாவாசை, ராமநவமி அனுமன் ஜெயந்தி
நேரம்: காலை 7:30 - இரவு 9:30 மணி
தொடர்புக்கு: 094838 71262
அருகிலுள்ள தலம்: காவேரி சித்தேஸ்வரர் கோயில் 27 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி

