/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று! தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!
/
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று! தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று! தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று! தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!
ADDED : மே 30, 2016 09:34 AM

* சுயமாக சிந்தித்து மனிதன் அறிவுவழியில் வாழ்வு நடத்த வேண்டும். சுயஅறிவு படைத்தவனால் மட்டுமே, தவறுகள் உருவாகிற போதே திருத்திக் கொண்டு வாழ்வில் உயர்வடைய முடியும்.
* வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் உயர்ந்த லட்சியம் வேண்டும். லட்சியம் இல்லாதவன் மனிதனாக மாட்டான். லட்சியத்தை நோக்கி எப்போதும் கனவு காண வேண்டும். அதை சாதிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* வாழ்வில் பிடிப்பற்ற தன்மை, சலிப்பு, திருப்தியின்மை போன்ற உணர்வுகளால் மனிதர்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் லட்சியவாதிகளிடம் இத்தகைய உணர்வு வெளிப்படுவதில்லை.
* மனிதன் நேர்மையாக வாழ வேண்டும். செல்வந்தன், அறிவாளி, தர்மவான் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு சமுதாயத்தில் மற்றவர்களை ஏமாற்ற முயலக்கூடாது.
* மனிதர்கள் அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
* மனிதர்களுக்குள் தனித்தன்மை என்பதற்கு தோலின் நிறம், உடல் அமைப்பு ஆகிய வெளித் தோற்றத்தை மட்டும் கருதுவது கூடாது. ஆளுமைப் பண்பில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு இருக்கிறது.
* முயற்சி ஒரு போதும் வீணாவதில்லை. எவ்வளவு சிறிய முயற்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன் ஒருநாள் கிடைத்தே தீரும்.
* போட்டியில் வெல்வதையே வெற்றி என்று கருதுகிறார்கள். ஆனால், போட்டி மனப்பான்மையே மனிதர்களுக்கிடையே பிரச்னை உருவாவதற்கு காரணமாக இருக்கிறது.
* தற்காலத்தில் பணம் மட்டுமே வெற்றியின் அளவுகோலாக இருக்கிறது. செல்வம், புகழ், பதவியில் இருப்பவர்களை வெற்றியாளர்கள் என கருதுகிறார்கள். அவர்களின் மனதிற்குள் வெறுமையுடன் வாழ்கிறார்கள் என்பதை பலரும் அறிவதில்லை.
* மனதிருப்தி கொண்டவர்கள், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழ்பவர்கள், வாழ்க்கையின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் ஆகியோரே வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவதாக மனவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
* உலகின் எந்த இடத்தில் இருந்தாலும், என்ன பணியில் ஈடுபட்டாலும் அதை பெருமைக்குரியதாக மனிதன் கருத வேண்டும். இதுவே வெற்றிகரமான வாழ்வின் முதல் அடையாளம்.
* மிருகத்தனம், மனிதத்தன்மை, தெய்வீகம் ஆகிய மூன்று பண்புகள் மனிதனுக்குள் இருக்கின்றன. இதில் தெய்வீகத்தை வளர்க்க வேண்டும். மிருகத்தனத்தை விட வேண்டும்.
* எந்த வேலையையும் அலட்சியமாக கருதுவது கூடாது. வேலை சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் விழிப்புடன் ஈடுபட வேண்டும். பணியின் மூலம் மன நிறைவும், இன்பமும் காணும் விதத்தில் செயல்பட வேண்டும்.
* தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், பிறருக்கு கூழைக்கும்பிடு போடுவதும் பணிவு ஆகாது. தன்மான உணர்வுடன் பலம், பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்வதே உண்மையான பணிவின் இலக்கணம்.
* கிருமிகள் உடம்பில் நுழைந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி அதை விரட்ட முயலும். அதுபோல, வெற்றி மனப்பான்மை கொண்டவர்கள் பிரச்னைக்கான சூழ்நிலையை விரட்டியடித்து எப்போதும் மனதை சீராக வைத்துக் கொள்வர்.
சொல்கிறார் பஜனானந்தர்

