/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திருத்தல உலா - சுகப்பிரசவம் அருளும் பெரியநாயகி
/
திருத்தல உலா - சுகப்பிரசவம் அருளும் பெரியநாயகி
ADDED : டிச 03, 2010 03:07 PM

பிரசவம் என்பது மறுபிறப்புக்கு சமம். சுகமாக பிரசவமாக சிவகங்கை சமேத சசிவர்ணேஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள்.
தல வரலாறு: சசி என்றால் சந்திரன். சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்திற்காக சிவபூஜை செய்து நிவர்த்தி பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்ததால் சிவனுக்கு சசிவர்ணேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இந்தக்கோயிலை எழுப்பினார். சிவகங்கை சமஸ்தானம் நிர்வாகத்தில் உள்ள கோயில் இது.
மருந்து குடிப்பு: இங்குள்ள பெரியநாயகி அம்பிகை பிரசித்தி பெற்றவள். பவுர்ணமியன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். இப்பகுதியிலுள்ள பெண்கள் சுகப்பிரசவம் ஆக இவளிடம் வேண்டிக்கொள்கின்றனர். இதற்காக 'மருந்து குடிப்பு' என்னும் சடங்கை செய்கின் றனர். கர்ப்பிணிகளுக்கு ஐந்துமாதமாக இருக்கும் போது, அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்து, அதை பிரசாதமாகப் பெற்று பருகுகிறார்கள். கோயிலுக்கு வரமுடியாத பெண்கள் சார்பில் அவர்களது குடும்பத்தார் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
அழுகை பிரார்த்தனை: பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் பெரியநாயகியிடம் வேண்டிக் கொள்கின்றனர். இதற்காக இங்கு வரும் பெற்றோர் குழந்தையை அம்பாள் சந்நிதி முன் படுக்க வைத்து வணங்குகின்றனர். பின்பு குழந்தை மீது அபிஷேக தீர்த்தத்தை தெளிக்கின்றனர். சிலர் தீர்த்தத்தில் குளிக்கவும் வைக்கிறார்கள். இதனால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
விசேஷ துர்க்கை: வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சந்நிதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள். ஆனால், இக்கோயிலில் தென்திசை நோக்கி இருக்கிறாள். இரண்டு கைகளுடன், இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனைக்கிடத்திய நிலையில் இவள் அமர்ந்திருக்கிறாள். திருமணத்தடை உள்ள பெண்களும், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களும், வயது அதிகமாகியும் ருது வாகாதவர்களும் இவளுக்கு தீபமேற்றி, 27 முறை சந்நிதியை வலம் வந்து வணங்குகின்றனர். மாசி மகத்தன்று இவளுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.
நாகதோஷ நிவர்த்தி: அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. பிரகாரத்தில் நாகத்தின் கீழே திருநாகேஸ்வரர் லிங்கம் இருக்கிறது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை மற்றும் நாகம் தொடர்பான இதர தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30- 6 மணி) பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின் றனர். சூரியன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், காலபைரவர், சந்திரன் உள்ளனர்.
இருப்பிடம்: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே இக்கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6- 10.30 மணி, மாலை 5- இரவு 8.30 மணி. ராகு கால பூஜைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 3- இரவு 8.30 வரையிலும், வெள்ளிக் கிழமையன்று காலை 6-
மதியம் 12.30 வரையிலும் திறந்திருக்கும்.
போன்: 94420 51144.