/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திருமண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி
/
திருமண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி
ADDED : அக் 13, 2023 03:22 PM

திருச்சி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர், விசாலாட்சியம்மனை தரிசித்தால் திருமண யோகம் உண்டாகும். திருமணத்தடை உள்ளவர்கள் தலவிருட்சமான கல் வாழை மரத்திற்கு வஸ்திரம் சாத்தி கிரகதோஷம் தீர வழிபடுகின்றனர்.
வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. ஆதிசேஷனாகிய பாம்பு தன் பலத்தை நிரூபிக்க, கைலாய மலையை சுற்றி வளைத்தது. பதிலடியாக புயலாக மாறி தாக்கினார் வாயு. கைலாயத்தில் இருந்த சிகரங்கள் பெயர்ந்து பூமியில் விழுந்தன. அவை திரிகோணமலை, திருகாளத்தி, திருச்சிராமலை, திருஈங்கோய்மலை, ரஜதகிரி, தீர்த்தகிரி, ரத்தினகிரி, சுவேதகிரி ஆகியன. இதில் சுவேதகிரியே இத்தலமாக விளங்குகிறது.
திருப்பைஞ்ஞீலி எனப்படும் இங்கு பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னியரும் திருமண வரம் பெற அம்பிகையை நோக்கி தவமிருந்தனர். மனமிரங்கிய அம்பிகை வரம் அளித்ததோடு, கல் வாழை மரமாக மாறி இங்கு குடிகொண்டார். சிவபெருமானும் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.
ஞீலி என்பது கல் வாழை. இதன் பெயரிலேயே 'ஞீலிவனேஸ்வரர்' என மூலவர் அழைப்படுகிறார். விசாலாட்சி. நீல்நெடுங்கண் நாயகி என அம்மனுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. ஆண்டு தோறும் புரட்டாசி, பங்குனி மாதங்களில் மூலவர் மீது சூரியக் கதிர்கள் விழுகின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர்.
பல்லவர் கால பாணியில் அமைந்த இக்கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இங்குள்ள திருக்கார்த்திகை வாயிலைக் கடந்தால் மூலவரை தரிசிக்கலாம். அதிகார வல்லபர், பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் என மூலவரின் பெயர் கல்வெட்டுகளில் உள்ளது. சுதாமர் என்னும் முனிவர் தவமிருந்து இங்கு மோட்சம் பெற்றார். விசாலாட்சி, எமதர்மன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என்னும் ஏழு தீர்த்தங்கள் இங்குள்ளன.
ஆறாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சன்னதியில் சிவனின் காலடியில் குழந்தை வடிவில் எமதர்மன் உள்ளார். மார்க்கண்டேயனைக் காப்பாற்ற காலால் உதைத்து எமதர்மனைக் கொன்ற சிவன், மீண்டும் அவனை உயிர்ப்பித்த தலம் இது.
ராவணன் வாயில் எனப்படும் மூன்றடுக்கு கோபுரத்தின் இடது புறத்தில் சோற்றுடை ஈஸ்வரர் சன்னதி உள்ளது. ஒன்பது படிகள் கீழே இறங்கி இவரை தரிசிக்க வேண்டும். நவக்கிரகங்களாக கருதப்படும் ஒன்பது குழிகள் இங்குள்ளன. அதில் தீபமேற்றி வழிபட
கிரக தோஷம் விலகும்.
எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 23 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம், சித்திரை சதயம் திருநாவுக்கரசர் குருபூஜை எமதர்மனுக்கு தைப்பூச விழா
நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 88702 29055
அருகிலுள்ள தலம்: திருப்பராய்த்துரை தாருகாவனேஸ்வரர் கோயில் (நோயின்றி வாழ...)
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 99408 43571