ADDED : பிப் 04, 2011 02:04 PM

ராகு தோஷம் போக்கும் திருநாகேஸ்வரம் என்ற தலம் கும்பகோணத்தில் இருப்பது போல, சேக்கிழார் சுவாமியால் சென்னை குன்றத்தூரிலும் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு: சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் 'சேக்கிழார்' என்றழைக்கப்பட்டார். புலமை மிக்க சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார். நாகேஸ்வரர் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, குன்றத்தூரில் கோயில் எழுப்பினார். சிவனுக்கு, 'நாகேஸ்வரர்' என்று பெயர் சூட்டினார். இத்தலம் 'வடநாகேஸ்வரம்' என்று அழைக்கப்பெற்றது.
நாகதோஷ பரிகாரம்: நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி, மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்தும் வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறாள். தை வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. சிவ தரிசனம்: பிரகாரத்தில் சேக்கிழாருக்கு சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நிற்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார். அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி
பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர். இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த இடம் உள்ளது. அங்கு அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.
சிறப்பம்சம்: சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் சிறு சேதம் அடைந்தது. பக்தர்கள் அதை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். புதிய லிங்கத்தை சன்னதிக்கு பின்புறம் வைத்தனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாக வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் இருக்கின்றனர். காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, முருகனின் தளபதி வீரபாகு, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.
திருவிழா: சித்ராபவுர்ணமி 10 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தைப்பூசம், ஆடிப்பூரம், மாசிமகம்.
இருப்பிடம்: சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6.30 - 12 மணி, மாலை 5 - 9 மணி.