/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரத்தலம்
/
சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரத்தலம்
ADDED : மார் 29, 2016 01:56 PM

சுக்கிரன் திருமாலை வழிபட்டு கண் பார்வை பெற்ற தலம் வெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோவில். இவரை வழிபட்டால் கண் நோய், சுக்கிரதோஷம் நீங்கி சுகமான வாழ்வு உண்டாகும்.
தல வரலாறு: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். தானம் பெற வந்தவர் விஷ்ணு என்பதை அறியாத மகாபலி தானம் அளிக்க சம்மதித்தான். ஆனால் உண்மையறிந்த அசுர குரு சுக்கிராச்சாரியார், தாரா பாத்திரத்தின்(கெண்டி) துவாரத்தை வண்டு வடிவெடுத்து தீர்த்தம் வராமல் அடைத்து விட்டார்.
இதை அறிந்த விஷ்ணு தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தினார். வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை பறி போனது. பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்ட சுக்கிராச்சாரியார், இத்தலத்திலுள்ள பெருமாளை வழிபட்டு பார்வை பெற்றார். இதன் காரணமாக இத்தலம் வெள்ளியங்குடி என பெயர் பெற்றது. வெள்ளி என்பது சுக்கிரனின் பெயர்களில் ஒன்று. இங்கு தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். உற்சவர் சிருங்கார சுந்தரர். தாயார் மரகதவல்லி.
சங்கு சக்கர கருடன்: தேவ சிற்பியான விஸ்வகர்மா திருமாலுக்கு பல கோவில்களை அமைத்தார். இதே போல் தன்னால் கோவில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பியான மயன் வருந்தி பிரம்மாவிடம் முறையிட்டார். பூலோகம் சென்று தவ வாழ்வில் ஈடுபடும் படி பிரம்மா வழி காட்டினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார். அப்போது மயன், தசரத குமாரனாக ராமாவதார கோலத்தில் காட்சி தர பெருமாளிடம் வேண்டினார். தன் கையிலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, ராமனாக வில், அம்புடன் தரிசனமளித்தார். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கைகளுடன் இருக்கிறார்.
கருங்கல்லில் வாழை: பெருமாள் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட நிலையில் வீற்றிருக்கிறார். திருமேனியில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் இருக்கும் இவர் ஸ்ரீராப்திநாதர் (பாற்கடல் நாதர்) என அழைக்கப்படுகிறார். சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோவில் திவ்ய தேசங்களில் 22 வது தலமாகும். மூலவர் சன்னிதி மீது புஷ்கலா வர்த்தக விமானம் உள்ளது. வைணவ மேதையான பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த சேங்கனூர் இத்தலம் அருகில் உள்ளது. காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் தங்கி கோவில் திருப்பணி செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கு கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை குலை தள்ளுவதும் வாழையடி வாழையாக நிகழ்ந்து வருகிறது. சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவையும் இங்குள்ளன.
சுக்கிரத்தலம்: பார்வை அளித்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிரன் கருவறையில் அணையா தீபமாக இருப்பதாக ஐதீகம். கும்பகோணத்தைச் சுற்றி 9 வைணவ நவக்கிரகத் தலங்கள் அமைந்துள்ளன. சூரியனுக்கு கும்பகோணம் சாரங்கபாணி கோவில். சந்திரனுக்கு திருப்புள்ளங்குடி அருகிலுள்ள நாதன்கோவில். அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு திருநறையூர் நாச்சியார்கோவில். புதனுக்கு திருப்புள்ள பூதங்குடி, குருவுக்கு திருஆதனூர், சனிக்கு ஒப்பிலியப்பன் கோவில், ராகுவுக்கு கபிஸ்தலம். கேதுவுக்கு திருக்கூடலூர் ஆடுதுறை பெருமாள் கோவில்.
இதுதவிர மாந்திக்கு திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் பரிகார தலமாக உள்ளது. வெள்ளியங்குடி சுக்கிரன் என்னும் வெள்ளிக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. பார்வை குறைபாடு, சுக்கிர தோஷத்தால் திருமணத்தடை, குழந்தை பேறின்மை நீங்க பக்தர்கள் வழிபட்டு பலன் அடைகின்றனர். சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரையில் வழிபடுவது சிறப்பு. இந்தக் கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பிடம்: கும்பகோணம்-அணைக்கரை சாலையில் சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து அன்னை காலேஜ் சாலையில் 6 கி.மீ.,
நேரம்: காலை 8.00 - மதியம் 12.00 மணி, மாலை 5.00- இரவு 6.30 மணி
அலைபேசி: 94433 96212, 98410 16079

