
கடலூர் மாவட்டம் சி.மானம்பட்டி வெற்றிவேல் முருகன் கோயிலில் வெற்றிலை துடைப்பு வழிபாட்டைச் செய்யும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தை ஒட்டி இந்தக் கோயிலைத் தரிசிப்போம்.
தல வரலாறு: கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவருக்கு கடும் நோய் ஏற்பட்டது. மருத்துவத்தால் பலன் கிடைக்கவில்லை. வீட்டார் மிகுந்த கலக்கத்தில் இருந்தனர். அப்போது, படுக்கையில் இருந்தவருக்கு, மயில் மீது முருகன் காட்சி தருவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. படுக்கையில் இருந்து எழுந்தவர், உறவினர்களை அழைத்து 'எனக்கு பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள்!' என்றார். அவருக்கு உணவு கொடுக்கவே, அதைச் சாப்பிட்டுவிட்டு 'நான் குணமாகிவிட்டேன்!' என்றார். உறவினர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் பக்தர் தாம் கண்ட முருகனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினார். இவரே வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை இல்லை. கோயில் எதிரே வங்காள விரிகுடா கடல் உள்ளது.
மிளகு பிரசாதம்: நீண்ட நாட்களாக நோய் ஏற்பட்டுள்ளவர்களுக்கு சுவாமிக்கு பூஜித்த மிளகு பிரசாதம் தருகின்றனர். இதை பொடித்து பால் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் நோய் குணமாவதாக நம்பிக்கை. வாய் பேசாதோர் குணம் பெறவும், பேச்சுத்திறமை வளரவும் இந்த பிரசாதத்தை சாப்பிடலாம்.
வெற்றிலை வழிபாடு: திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு 'வெற்றிலை துடைப்பு' என்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் வெற்றிலையைக் கொடுக்கின்றனர். அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத் துக் கொண்டு, முருகனை தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றிலை மங்கலப் பொருட்களில் ஒன்றாகும். இதனை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக் கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதோர் வெற்றிவேல் முருகனுக்கு மூன்று மஞ்சள் மற்றும் எலுமிச்சை வைத்து வணங்குகின்றனர். இந்த எலுமிச்சை சாற்றை தம்பதியர் இருவரும் பருக வேண்டும். மஞ்சளை குழந்தை பாக்கியம் இல்லாத பெண், தினமும் தேய்த்து நீராடவேண்டும். இதனால், விரைவில் அந்த பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.
இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் (சுற்றுலாத் தலம்) செல்லும் வழியில் (14 கி.மீ.,) கிள்ளை என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் ஒரு கி.மீ., சென்றால் இவ்வூரை அடையலாம். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, சிதம்பரத்தில் இருந்து முடசலோடைக்குச் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது.
திறக்கும் நேரம்: காலை 6 - மதியம் 12 மணி, மாலை 4 - இரவு 9 மணி. செவ்வாய், வெள்ளியன்று நடை அடைக்கும் நேரம் நள்ளிரவு 12 மணி.
போன்: 98428 13884.