ADDED : ஆக 18, 2017 10:24 AM

* காற்றின் பணி உலர்த்துவது. நெருப்பின் பணி சுடுவது. தண்ணீரின் பணி நனைப்பது. அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடமையாக இருக்கிறது.
* ரோஜா செடியிலிருந்து பூவை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டியதில்லை. அதுபோல, புத்தகங்களில் இருந்து சாரத்தை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளி விடலாம்.
* கடலில் ஒரு அலை முடிந்ததும், மற்றொரு அலை கிளம்பும். அதுபோல, முட்டாளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பி கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும்.
* கடிகாரம் இயங்க சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ, அதுபோல் உலகம் இயங்க கடவுள் இருக்கிறார்.
* உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை எப்படி காண முடியும்?
* உடலின் இயக்கத்தை கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது.
* ஈரமண்ணில் செடி வளர்கிறது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல இரக்கமுள்ள மனதில் பக்தி வளர்கிறது. கல் மனதில் இது போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை.
சொல்கிறார் கிருஷ்ணப்ரேமி சுவாமி