ADDED : ஜூன் 08, 2018 04:01 PM

திருவண்ணாமலையில், உண்ணாமலையாளுடன் அண்ணாமலையாராக அருளும் சிவன்; தன்னையே கொடுத்து முத்தாம்பிகையுடன் பவழகிரீஸ்வரராக அருளும் அற்புத தலமே பவழக்குன்று. பழமைக்கும் பக்திக்கும் பெயர் போன திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் அருகே அமைந்துள்ளது பவழக்குன்று மலை. இங்கு பவழகிரீஸ்வரரை மட்டுமல்ல, அண்ணாமலையார் ஆலயத்தின் முழு எழில் தோற்றத்தையும் ஆத்மார்த்தமாக தரிசிக்கலாம். மொத்த திருவண்ணாமலைக்குமான 'டெலஸ்கோப்' தான் இந்த பவழக்குன்று.
அண்ணாமலையார் ஆலயத்தின் பெரிய வீதியை கடந்து சற்று நடந்தால், 'ஸ்ரீ பவழக்குன்று மடாலயம்' என்ற தோரணவாயில் தெரியும். அதை கடந்தால் சிறிய வீடுகளுக்கு நடுவில் மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் தெரியும். படிக்கட்டுகளை பார்த்தவுடனேயே உடல் லேசாக சிலிர்க்க ஆரம்பிக்கும். முதல் படியில் கால் வைத்து நிமிர்ந்து பார்த்தால், மேலே சிவன் புன்னகைத்த படியே நம்மை அழைப்பது போலிருக்கும். நடக்க நடக்க நம்மையே அறியாமல் கால்கள் 100 படிகளை கடந்திருக்கும்.
பாறையில் செதுக்கப்பட்ட நந்தி வழியில் வரவேற்கும். நந்தீஸ்வரரை வணங்கி விட்டு நடந்தால், வலப்புறம் சிறிய கோயில். அங்கு விநாயகர், முருகன், சிவன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஒரே கல்லில் பஞ்சமூர்த்தியாக அருள்கின்றனர்.
அவர்களையும் தரிசித்து விட்டு, ஒவ்வொரு படியாக ஏறினால், தரையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வானை நோக்கி செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.
அண்ணாந்து பார்த்த அண்ணாமலையார் ஆலயத்தை இப்போது குனிந்து பார்த்துக் கொண்டிருப்போம். கம்பீரமான கோபுரங்கள், மலைகள், வீடுகள் சூழ்ந்த திருவண்ணாமலையின் பேரழகில் தத்தளிப்போம்.
அந்த மயக்கத்தில் இருந்து மீள்வதற்குள், பவழகிரீஸ்வரரை தரிசிக்கும் ஆவல் வேகமெடுத்து, சற்று வேகமாக நடந்தால், சிறிய சுனை. அது அபிஷேகத்திற்கான தீர்த்தம். அதன் அருகே அங்காங்கே குரங்குகள் குதிக்கின்றன.
பின்னால் திரும்பிப் பார்த்தால்...
பவழகிரீஸ்வரர் கோயில்.
வேகவேகமாக நடந்து உள்ளே நுழைந்தால், அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த கல் துாண்களுடன் நிமிர்ந்து நிற்கிறது பவழகிரீஸ்வரர் ஆலயம்.
கோயில் முகப்பில் நந்தி. முன் மண்டபத்தின் இடப்புறம் விநாயகர். வலப்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகன். கருவறையில் அம்மை - அப்பன்/முத்தாம்பிகை - பவழகிரீஸ்வரர். இருவரும் 'நீ பாதி நான் பாதி' என்ற கோலத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருள் மழை பொழிகின்றனர்.
கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருக்கையில், சிவனின் கண்களை பார்வதி, தன் கைகளால் மறைத்தார். சூரிய, சந்திரனாகிய அவரது இரு கண்களை மறைத்ததால், உலகம் இருண்டது. அந்தப் பாவத்திற்காக சிவனைப் பிரிந்த பார்வதி தேவி, பூலோகம் வந்து கடும் தவம் புரிந்தார். அவரது தவத்திற்கு மனமிரங்கிய சிவபெருமான், பவழக்குன்று மலையில் பார்வதிக்கு காட்சி கொடுத்து, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தன் இடது பாகத்தை அளித்து, சக்தியும் சிவமும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக இங்கு அருள்கின்றனர். இவரை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். முன்வினைப் பாவம் தீரும்.
மேலும், கவுதம முனிவரும், ரமணரும் இங்கு தவம் செய்துள்ளனர். ரமண மகரிஷி, அவரது தாயார் அழகம்மையாருக்கு உபதேசம் வழங்கியதும் இங்கே தான்.
கோபுரத்தின் நான்கு புறங்களில், தட்சிணாமூர்த்தி, சயன கோலத்தில் பெருமாள், மயில் மேல் முருகன், நந்தியில் சிவனும், பார்வதியும் அருள்கின்றனர். பிரகாரத்தின் மேலே நான்கு மூலையிலும் நந்தி இருப்பது இயல்பு. ஆனால், இங்கு நந்திக்கு கீழே முதலை சிற்பமும் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு.
கோயில் மேலே இருந்து பார்க்கும் போது பவழக்குன்றை சொர்க்கலோகமாகவும், திருவண்ணாமலையை பூலோகமாகவும் உணர்வோம். போதுமப்பா...
இது போதும் என்ற மனநிலையில் நாம் மலையிறங்கி வந்தபின் உணர்வோம், நம் 'மனம்' இறங்கி வராததை.
எப்படி செல்வது: அண்ணாமலையார் கோயிலில் இருந்து 1/2 கி.மீ.,ல் பவழக்குன்று தோரணவாயில்
விசேஷ நாட்கள்: பிரதோஷம், சிவராத்திரி, ஆடி கார்த்திகை, தை கார்த்திகை, மகாதீபத்தன்று சிறப்பு பூஜை
நேரம்: காலை 8:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 94434 30713
அருகிலுள்ள தலம்: 100 அடியில் துர்க்கை அம்மன் கோயில்