உங்கள் பக்கம் நியாயமா... உதவுகிறார் மத்தியஸ்தநாதர்
உங்கள் பக்கம் நியாயமா... உதவுகிறார் மத்தியஸ்தநாதர்
ADDED : ஜூன் 10, 2022 08:45 AM

அசையும், அசையா சொத்துக்களில் வில்லங்கமா, சமரசம் இல்லையா வாங்க தாருகாபுர மத்தியஸ்தநாதர் தீர்த்து வைக்கின்றார். தாருகாபுரம் என்கிற இத்தலம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் உள்ளது. தென் தமிழக பஞ்ச பூத தலங்களில் இரண்டாவது தலம் இது. சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன் கோட்டை ஜமீன் வாரிசுகளால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள சூத வனத்தை தாருகன் என்ற அசுர பக்தன் ஆட்சி செய்து வந்ததால் அவனது பெயரே இப்பகுதிக்கு விளங்கட்டும் என்று சிவபெருமான் அருளினார். அன்று முதல் இப்பகுதிக்கு 'தாருகாபுரம்' என பெயர் வந்தது.
ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்த நிலப்பகுதியில் எல்லைப்பிரச்னை முற்றவே இங்குள்ள சிவபெருமானே சித்தராக வந்து சமரசம் செய்து வைத்தார் அதனால் அவருக்கு மத்தியஸ்தநாதர் (பிணக்கு அறுத்த நாதர்) என்னும் பெயர் விளங்குகிறது. பல ஆண்டுகளாக இழுபடும் சொத்துப்பிரச்னைகளுக்கு இங்குள்ள சிவபெருமானிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். அறுபத்து மூவர் சிலைகள் அனைத்தும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் அதிசயம். தட்சிணாமூர்த்தியின் பீடத்தினை சுற்றி நவக்கிரகங்களை வடித்திருப்பதால் நவக்கிரகத்திற்கு என தனிச்சன்னதி கிடையாது. இங்குள்ள விஷ்ணு துர்கையிடம் வெள்ளி, செவ்வாய் நாட்களில் பக்தர்கள் ஏராளமான வேண்டுதல் வைக்கின்றனர். சுவாமிக்கு வலது புறம் கோயில் கொண்டுள்ள அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. பல ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்ற வைகாசி விசாகத்தேர் திருவிழா தற்போது மிகச்சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றார்கள். தல மரம் மாமரம். தீர்த்தம் சிவகங்கை. மலையடிவாரத்தில், மகாதேவர் என்ற சிவபெருமானுக்குரிய குடவறைக்கோயிலும், மலை மீதும் சுந்தர்ராஜர் என்ற பெருமாள், பாலசுப்பிரமணியர் கோயில்கள் இங்குள்ளன.
எப்படி செல்வது: சங்கரன்கோவிலிலிருந்து 15 கி.மீ.,
விசஷே நாள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, சிவராத்திரி, அஷ்டமி, பிரதோஷம். பவுர்ணமி
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94861 20469
அருகிலுள்ள தலம்: வாசுதேவநல்லுார் சிந்தாமணி நாதர் கோயில் 6.கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 87787 58130
