
ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திர லோகம் இருளில் மூழ்கியது. காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, நவநிதிகள் எல்லாம் மறைந்தன. பதறிய இந்திரன் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவை சரணடைந்தார்.
“இந்திரா! உன் செல்வம் அனைத்தும் பாற்கடலுக்குள் மறைந்து விட்டன. அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தால் அவை ஒவ்வொன்றாக வெளிப்படும்” என்றார் மகாவிஷ்ணு. மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் உதவியுடன் தேவர்கள் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மந்திர மலை நிலைகுலைந்து சாய்ந்தது. அதை தாங்கிப் பிடிக்க, மகாவிஷ்ணு ஆமை வடிவெடுத்து ஆழ்கடலுக்குள் சென்றார். மற்றவர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த மகாவிஷ்ணுவின் தியாகம் கண்டு மலை வியந்தது. விஷ்ணுவின் முதுகில் சுழலும் போது சுமை தெரியாமல் சுகத்தை அளித்தது. இதன் பின்னர் இந்திரனின் செல்வம் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவந்தன.