
பெருமாள் கோயில் திருவிழாவில் சுவாமிக்கு பின்னால் வேத மந்திரங்களை பட்டாச்சாரியார்கள் ஓதியபடி வருவர். நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பெருமாளுக்கு முன் பாடியபடி அரையர்கள் செல்வர். இந்த நடைமுறை 108 திவ்ய தேசங்களிலும் உள்ளது.
இதற்கு காரணமானவர் 'நம்மை எல்லாம் ஆளும் நம்மாழ்வார்'. இச்செய்தியை சடகோபர் அந்தாதி என்னும் நுாலில் கம்பர் குறிப்பிடுகிறார்.
வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந்
தோர்விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக்கொழுந்தின்
முன்செல்க குணங்கடந்த
போதக்கடல் எங்கள் தென்குரு
கூர்ப்புனிதன் கவியோர்
பாதத்தின் முன் செல்லுமோ
தொல்லை மூலப் பரஞ்சுடரே?
பட்டாச்சாரியார்கள் ஓதும் வேதங்களைக் பெருமாள் கடந்து சென்றாலும் செல்லட்டும். ஆனால் ஆதிமூலமான பரம்பொருளின் குணங்களுக்கு எல்லாம் அப்பால் திகழும் திருக்குருகூர் சடகோபர் பாடிய பாடல்கள், பெருமாளின் பாதங்களுக்கு முன்னே தான் செல்லும். பெருமாள் அதை ஒரு போதும் கடந்து செல்ல மாட்டார்.
சடகோபரின் (நம்மாழ்வார்) தமிழால் ஈர்க்கப்பட்டு அவர் பாசுரங்களுக்கு பின்னே தான் தொடர்ந்து வருவார் என்பது கம்பர் வாக்கு.