ADDED : ஜூன் 09, 2017 02:01 PM

பெருமாள் பக்தனான மன்னன் பத்மாட்சன், காட்டிற்குச் சென்று தவ வாழ்வில் ஈடுபட்டான். அவனுக்கு காட்சியளித்த பெருமாள், அவன் விரும்பும் வரம் அளிப்பதாக கூறினார். மன்னன் அவரிடம், “எனக்கு லட்சுமி தாயார், மகளாக பிறக்க வேண்டும்,” எனக் கேட்டான். பத்மாட்சனிடம் ஒரு மாதுளம்பழத்தைக் கொடுத்து, “உன் விருப்பம் விரைவில் நிறைவேறும்,” என அருள்புரிந்தார் பெருமாள்.
மன்னனிடம் தரப்பட்ட அந்தக் கனி பெரிதாக வளர்ந்தது. வியப்படைந்த மன்னன், அதை உடைத்துப் பார்த்த போது, ஒருபுறம் மாதுளை முத்துக்களும், மறுபுறம் பேரழகு மிக்க பெண் குழந்தையும் இருப்பது கண்டு மகிழ்ந்தான். செந்தாமரை மலர் போல சிரித்த முகத்துடன் காட்சியளித்ததால் தன் மகளுக்கு 'பத்மை' என்று பெயரிட்டான். இந்த பெயரே இப்போது 'பத்மா' என திரிந்துள்ளது. மாதுளம் பழத்தில் இருந்து லட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பெருமாளுக்கும், லட்சுமிக்கும் பூஜை செய்யும் போது, நைவேத்யமாக மாதுளம்பழம் வைப்பது சிறப்பு.

