ADDED : அக் 13, 2015 03:14 PM

நவராத்திரி திருவிழா தசரா என்ற பெயரில் மைசூருவில் கொண்டாடப்படுகிறது. தசரா என்பதின் பொருள் பத்து தலைகளை கொய்வது என்பதாகும். வட மாநிலங்களில் ராமன், ராவணனை கொன்றதை 'தசஹர' என்று கூறுவார்கள். இதுவே திரிந்து தசரா என்று ஆயிற்று.
மைசூருவில் மகிஷாசுரனை பராசக்தி மகிஷாசுர மர்த்தினியாக உருவெடுத்து அழித்தாள். சாமுண்டீஸ்வரி என்ற பெயர் கொண்ட இவள், பத்து முகங்களும், பத்து கால்களும், பத்து கைகளும் கொண்டவள். எனவே 'தசம்' என்ற சொல் இவளுக்கு பொருந்துகிறது. இதனால் இவள் வீரச்செயல் புரிந்த திருநாள் 'தசரா' எனப்படுகிறது.
சாமுண்டீஸ்வரி நமது இடையூறுகளை நீக்கி நினைத்ததை அடையச் செய்பவள். இவள் பார்ப்பதற்கு பயங்கரமானவள் என்றாலும், அன்னையைப் போன்ற அன்புள்ளம் கொண்டவள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்று காட்டுபவள். இவளுக்கு சோம்பலாக இருப்பது பிடிக்காது. பணிகளை அலட்சியப்படுத்துவதையும் இவள் விரும்புவதில்லை.
தசரா திருவிழா, 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் ஆண்டபோது ஆரம்பமானது.
ஆரம்பத்தில் ஹம்பியில் இந்தவிழா நடந்தது. காலப்போக்கில் மைசூரு தசரா பிரபலமாகி விட்டது. இந்த விழாவைக் காண வெளிநாட்டு பயணிகளும் வந்து குவிகிறார்கள். மைசூருவில் மல்லிகை, சந்தனம், கத்தரிக்காய், வெற்றிலை, பட்டு ஆகியவை முக்கியமானவை. நவராத்திரி காலத்தில் இவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும்.
இங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலும், அரண்மனையும் தசராவை ஒட்டி அலங்கரிக்கப் பட்டிருக்கும். பொருட்காட்சியும் உண்டு.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யானைகள் ஊர்வலம் வருவது தான். 50க்கும் மேற்பட்ட யானைகள் செப்டம்பர் முதல் வாரம் முதலே மைசூருக்கு வரத்துவங்கிவிடும். இந்த
யானைகளில் எந்த யானை அன்னை சாமுண்டீஸ்வரியை சுமக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். இந்த யானையின் மீது தங்க சிம்மாசனம் அமைத்து, அதில் சாமுண்டீஸ்வரியின் சிலையை வைத்து ஊர்வலமாக கொண்டு வருவார்கள். இதற்காக இங்கு வரும் அனைத்து யானைகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த யானை தேர்வு செய்யப்படும். மைசூரு மகாராஜா ஊர்வலத்தை துவங்கிவைப்பார்.
விழாவிற்காக சில கோடி ரூபாய் செலவழிக்கப்படும். இதில் திருவிழா செலவு போக, மீதி பணத்தை ரோடுகளை செப்பனிடவும், பிற வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் செலவிடப்படும்.

