* நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி என்ற புளியமரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இந்த மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி பாசுரம் பாடினார்.
* பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரம், சிவபெருமானாக வழிபடப்படுகிறது. இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.
* திருவொற்றியூரில் தேவாரம் பாடிய சுந்தரருக்கும், சங்கிலியார் என்பவருக்கும் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் நடந்தது. சிவனே இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் நினைவாக மரத்தடியில் சிவன் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரத்தையும் சிவனாகக் கருதி வழிபடுகின்றனர்.
* குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் உள்ள ஆதி பலாமரத்தை 'குறும்பலாநாதர்' (சிவன்) என்ற பெயரில் வணங்குகின்றனர்.
* திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரச மரத்தின் கீழ் சுவாமி தேவர்களுக்காக தாண்டவம் ஆடினார். இதனால் பக்தர்கள் இம்மரத்தை சிவனாக வழிபடுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும், அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் தெரிய வருகிறது.

