ADDED : அக் 13, 2015 03:08 PM
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் கண்டேர்பல் என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் தூலாமுலா என்ற ஊர் உள்ளது. இங்கு நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்ட சிறு தீவைக் காணலாம். இந்த தீவிலுள்ள மணல் மேட்டில் 'பாதம்' போன்ற அமைப்பில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தில் க்ஷீரபவானி அம்பாளும், சிவனும் (சங்கரர்) உள்ளனர். இந்த குளத்து தண்ணீருக்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர். 'க்ஷீரம்' என்றால் 'பால்'. இந்த குளத்து நீர் பால் போல் வெண்மையாக இருந்ததாம். அது மட்டுமின்றி, இளம் சிவப்பு, இளம் பச்சை, பால் வெண்மை, சாம்பல் நிறத்திலும் இந்த குளத்து நீர் அவ்வப்போது மாறும். எப்போதாவது கருப்பாக மாறினால், தங்களுக்கு கெடுதல் வருமெனக் கருதி இப்பகுதி மக்கள் விசேஷ பூஜை செய்வார்களாம். சுவாமி விவேகானந்தர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளார்.

