
ஹஜ்ரத் இத்ரீஸ் ஒருமுறை வானவரை சந்தித்தார். அவரிடம், '' மலக்குல் மவுத் (உயிரைக் கைப்பற்றும் வானவர்) உங்களிடம் நட்புடன் பழகுவதாக அறிந்தேன். அவரிடம் என் மரணத்தை தாமதப்படுத்த சொல்லுங்கள். காரணம் இறைவனை நீண்ட காலம் வணங்க விரும்புகிறேன்'' என்றார்.
அதற்கு வானவர், ''வாழவும், அழியவும் ஒரு காலம் உண்டு. அவரவருக்குரிய காலம் முடியும் போது ஒரு விநாடி பிந்தவோ, முந்தவோ மாட்டார்கள்'' என்ற வசனத்தை அறிந்ததில்லையா?'' என்றார்.
''நன்றாக அறிவேன். ஆனாலும் என் விருப்பத்தை தெரிவிப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்'' எனக் கேட்டார்.
வானவரும் அவரை சுமந்து கொண்டு வானுலகில் சென்று சூரியன் அருகில் விட்டார். பின் மலக்குல் மவுத்திடம் விஷயத்தை சொன்னார். அதற்கு அவர், ''மரணத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் ஹஜ்ரத் இத்ரீஸ் எத்தனை காலம் வாழ்வார் என்பதை கணக்குப் பார்த்துக் கூறுகிறேன்'' என சொல்லி பேரேட்டை புரட்டினார். அதில் அவரது மரணம் சூரியன் அருகில் நிகழும் என்றிருந்தது. உடனே மலக்குல் மவுத், ''இந்நேரம் இறந்திருப்பார்'' என்றார். அதன்படி அவரும் இறந்திருந்தார். பின் வானவர்கள் அவரைக் குளிப்பாட்டி 'ஜனாஸா' தொழுகை நடத்தி அடக்கம் செய்தனர்.