ADDED : ஜன 16, 2025 01:47 PM
செய்யதுனா ஈஸா என்பவர் பயணம் செய்யும் போது, வழியில் சிலர் வாடிய முகத்துடன் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தனர்.
''ஏன் உங்கள் முகம் வாட்டமாக இருக்கிறது'' எனக் கேட்டார்.
''நரக நெருப்பில் இருந்து தப்பிக்க உடலை வருத்தி வணங்குகிறோம்'' என்றனர்.
''நரக நெருப்புக்கு பயந்தாவது வணங்குகிறீர்களே! உங்களை அவன் காப்பானாக'' என சொல்லி நடந்தார். இன்னொரு இடத்தில் உடல் இளைத்த சிலர் வணங்குவதைக் கண்டார். அவர்களிடம் கேட்டதற்கு, ''சுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசையால் உடலை வருத்தி வணங்குகிறோம்'' என்றனர்.
அதற்கு ஈஸா, ''வணக்கத்தினால்தான் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்றில்லை. ஆனாலும் அவன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவான்'' என பிரார்த்தித்தார். தொடர்ந்து நடந்தார். ஓரிடத்தில் சிலர் அமைதியாக நின்றிருந்தனர்.
அவர்களிடம் கேட்டதற்கு, ''நாங்கள் நரகத்திற்கு பயப்படவும் இல்லை. சொர்க்கத்தை விரும்பவும் இல்லை. அவன் விருப்பப்படி எது கிடைத்தாலும் ஏற்போம். ஆனால் அவனின் அன்பு எங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்கிறது'' என்றனர்.
ஈஸா மகிழ்ச்சியுடன், ''சுயநலம் அற்ற உங்களுக்கு அருகிலேயே அவன் இருக்கிறான்'' என மூன்று முறை சொல்லி விட்டு புறப்பட்டார்.