ADDED : அக் 15, 2023 09:32 AM
மக்களிடம் கீழ்க்கண்டவற்றை சொன்னார் நபிகள் நாயகம்.
நான் நிம்மதியான வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? ஸூர் எனும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் (இஸ்ராஃபீல் (அலை) அவர்கள்) எக்காளத்தை வாயில் வைத்துக்கொண்டு செவி சாய்த்து, தலைதாழ்த்திய வண்ணம் எப்போது ஊதும்படி கட்டளை பிறக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இறுதித் தீர்ப்பு நாளில் ஊதப்படும் குழலின் எதார்த்த நிலையை எவரால் அறிந்திட முடியும்? எனவே இறைவனே நமக்குப் போதுமானவன். அவன் சிறந்த பாதுகாவலன் (ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்) என்று சொல்லிக்கொண்டிருங்கள்.
(ராணுவத்தினரை ஒன்று திரட்டுவதற்காக ஊதப்படுகிற ஊதுகுழலுக்கு ஸூர் - எக்காளம் என்பர்)
இவருடைய கவலையை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, ''தாங்களே இப்படி நினைக்கிறீர்கள் என்றால், அந்த நாளில் எங்களுடைய நிலை என்னவாகுமோ தெரியவில்லையே? அந்த நாளில் நாங்கள் வெற்றி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்'' எனக்கேட்டனர்.
அதற்கு அவர், ''இறைவனையே முழுவதும் சார்ந்திருங்கள். அவனது உதவியிலும் பாதுகாப்பிலும் வாழ்க்கையைக் கழியுங்கள். இவ்வாறு செய்தால் வெற்றி அடையலாம்'' என்றார்.
