ADDED : மே 04, 2018 02:53 PM

குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதின் அவசியத்தை நாயகம் ஆழமாக வலியுறுத்துகிறார்.
குழந்தைகள் சேஷ்டை செய்தால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், ''உங்கள் குழந்தையை ஒழுக்கமாக வளருங்கள்,'' என பெற்றோரிடம் புகார் செய்வார்கள் ஒரு வாலிபன் தன்னுடன் படிக்கும் பெண்ணைக் கேலி செய்தால், பெண்ணின் தந்தை, “ஒழுக்கமில்லாத மகனைப் பெற்றிருக்கிறீரே,” என திட்டுவார்.
வாழும் காலத்தில் மட்டுமல்ல... இறந்த பிறகும் கூட, ஒரு மனிதன் நற்பெயர் பெற பெற்றவர்களே காரணமாக அமைகின்றனர். பெற்றோர் இறந்தபிறகு, ஒரு மகன் தவறு செய்தால், “அவன் தந்தை இவனை ஒழுக்கமாக வளர்த்திருந்தால், இப்படி தவறு செய்திருப்பானா?,” என இறந்த பிறகும், அந்த பெற்றோர் கெட்ட பெயர் வாங்குவார்கள்.
ஒரு மனிதன் இறந்து விட்டால் உலக ரீதியான எல்லாத் தொடர்புகளும் அறுந்து விடுகின்றன. ஆனால், மூன்று செயல்கள் மட்டும் அவனைப் பின்தொடரும்.
அவைகளில் ஒன்று, மக்கள் நீண்டகாலம் பலன் பெறும் பொருட்டு அவன் செய்து விட்டுச் சென்ற தர்ம காரியங்கள்.
பயணிகளுக்கு நிழற்குடை அமைத்தவர்கள், மரங்கள் நட்டுச் சென்றவர்களை...இது இன்னாரின் திருப்பணி என உலகம் பாராட்டும். பயன்அளிக்கக் கூடிய கல்வியும் அவனைப் பின் தொடரும். அவன் வாழ்ந்த போதுமக்களுக்கு பலனளிக்கும் அரிய கண்டுபிடிப்புகளை விட்டுச் சென்றிருந்தால், “படித்தால் அவனைப் போல் படிக்க வேண்டும்,” என்று சொல்லும். மூன்றாவது நல் ஒழுக்கமுள்ள குழந்தைகளைப் பாராட்டும். பெற்றோரின் நற்பெயரை குழந்தைகள் காப்பாற்றினால், அவர்களால் மறைந்த பெற்றோருக்கு பெருமை ஏற்படும்.