UPDATED : மே 05, 2010 09:08 PM
ADDED : மே 05, 2010 01:54 AM
தர்மபுரி : கடும் வறட்சி காரணமாக பச்சை திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கடந்த காலங்களில் அதிகளவில் பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டது. இங்கு உற்பத்தியாகும் திராட்சைகள், உள்ளூர் விற்பனைக்கு போக, ஆந்திர மாநிலம் ஐதராபாத், கேளர மாநிலம் கொச்சின், கர்நாடக மாநிலத்தில் உள்ள மது தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. பத்தாண்டாக இவ்விரு மாவட்டங்களிலும் திராட்சை சாகுபடி பரபரப்பு ஆண்டுக்கு, ஆண்டு குறைய துவங்கியதோடு, அதிக அளவில் "சீட்லெஸ்' பச்சை திராட்சைகள் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வரத்துவங்கியது. பச்சை திராட்சைக்கு கடந்த காலங்களில் சந்தையில் இருந்த வரவேற்பு குறைந்தது. இருப்பினும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட உள்ளூர் விற்பனை சந்தையை மையமாக வைத்து பல விவசாயிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு ஏப்ரலில் திராட்சை அறுவடை சீசன் துவங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக திராட்சை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திராட்சை கொடிக்கு, நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் இருந்து, காய் அறுவடைக்கு ஆண்டுதோறும் இரு முறை நடக்கும். இதில், கோடை விற்பனை காலங்களான ஏப்., மே மாதங்கள் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரையில் அறுவடை கிடைக்கும். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய தாலுகா பகுதியில் அதிக அளவில் பச்சை திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த பிப்ரவரியில் இருந்து கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. வறட்சியால் திராட்சை கொடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல், திராட்சை காய்கள் வெயிலுக்கு கொடிகளில் பழுத்து விரைவில் உதிர்ந்து விடுகின்றது. திராட்சை உற்பத்தி 80 சதவீதம் பாதிப்படைந்துள்ளதால், தர்மபுரி பாலக்கோடு விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். பச்சை திராட்சை சாகுபடியில் இருந்த பல விவசாயிகள் பன்னீர் திராட்சைக்கு மாற முடிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டங்களில் இருந்து பன்னீர் திராட்சை கொடி நாற்றுக்களை வாங்கி வந்து நடவு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
