PUBLISHED ON : மார் 26, 2024 12:00 AM

'ஒருவரை ஒருவர் கிண்டல் அடிப்பதிலேயே நேரத்தை செலவிட்டால், எப்போது பிரசாரம் செய்வது...' என முணுமுணுக்கின்றனர், கேரளாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர், மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பா.ஜ., சார்பில் களம் காண்கிறார். இருவரது பூர்விகமுகம் கேரளா என்றாலும், அவர்கள் கேரளாவில் வசித்த காலத்தை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சசி தரூர், பெரும்பாலான ஆண்டுகள் வெளிநாடுகளில் தான் வசித்துள்ளார் ராஜிவ் சந்திரசேகர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம், குஜராத் மாநிலத்தில் தான். இருவருக்குமே மலையாளம் சரளமாக பேசத் தெரியாது.
சசி தரூர் தொடர்ச்சியாக, 15 ஆண்டுகள் திருவனந்தபுரம் எம்.பி.,யாக இருப்பதால், ஓரளவு பேசுகிறார். சமீபத்தில், தன் சாதனை பட்டியலை ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் துண்டு பிரசுரமாக சசி தரூர் வெளியிட்டார்.
அப்போது, 'ராஜிவ் சந்திரசேகருக்கு மலையாளம் தெரியாது. அதனால், ஆங்கிலத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...' என, கிண்டலடித்தார்.
கடுப்பான ராஜிவ் சந்திரசேகர், 'சசி தரூர் மட்டும்,மலையாளத்தில் வெளுத்து வாங்கி விடுவாரா; அவரும் எழுத்து கூட்டிதானே படிக்கிறார்...' என்றார்.
கேரள மக்களோ, 'ஓரளவாவது மலையாளம் தெரிந்தவர்களுக்கு இந்த அரசியல் கட்சிகள் சீட் கொடுக்கலாமே...' என, ஆதங்கப்படுகின்றனர்.

