PUBLISHED ON : ஏப் 16, 2024 12:00 AM

'எதிரியாக இருந்தாலும், நம்மை விட திறமைசாலியாக இருந்தால் பாராட்டிதானே ஆக வேண்டும்...' என விரக்தியுடன் கூறுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானாவில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்த சந்திரசேகர ராவை, கடந்த சட்டசபை தேர்தலில் தோற்கடித்து, தேசிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ரேவந்த் ரெட்டி.
வயதில் இளையவர் என்றாலும், அரசியல் அனுபவத்தில் மிகவும் முதிர்ச்சியாக திகழ்கிறார். ஆட்சிக்கு வந்ததுமே, எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் வேலைகளை துவங்கி விட்டார்.
முதல்வர் பதவியில் அமர்ந்த கடந்த ஆறு மாதங்களில், பாரத் ராஷ்ட்ர சமிதியின் கணிசமான நிர்வாகிகளை காங்கிரசுக்கு இழுத்து வந்து விட்டார், ரேவந்த் ரெட்டி. பா.ஜ.,வைச் சேர்ந்த பலரும் ரேவந்த் ரெட்டி வீசிய வலையில் சிக்கி, காங்கிரசுக்கு தாவி விட்டனர்.
சந்திரசேகர ராவின் விசுவாசிகள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பலரும், காங்கிரசில் வரிசையாக இணைந்து வருகின்றனர். படிப்படியாக கூடாரம் காலியாகி வருவதை பார்த்து, கதி கலங்கியுள்ளார், சந்திரசேகர ராவ்.
'இன்னும் சில மாதங்கள் போனால், கட்சியில் சந்திரசேகர ராவையும், அவரது மகன் ராமாராவையும் தவிர, யாரும் இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது...' என்கின்றனர், தெலுங்கானா அரசியல்வாதிகள்.

