PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

'இதை வைத்தே அடுத்த சட்டசபை தேர்தல் வரை காலத்தை கடத்தி விடுவேன்...' என, நிம்மதிபெருமூச்சு விடுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார்.
ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்து வருகிறார், நிதீஷ் குமார். தற்போது, பா.ஜ.,வுடன் கைகோர்த்து முதல்வர் பதவியில் நீடிக்கிறார்.
இத்தனைக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை விட, மிக குறைவான தொகுதிகளில் தான், ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. கூட்டணி தர்மம், நிதீஷ் குமாருடன், பிரதமர் மோடிக்கு உள்ள நட்பு போன்ற காரணங்களால், பா.ஜ., மேலிடம் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கரிசனம் காட்டியது.
இதனால், நிதீஷ் குமாரை, 'டம்மி' முதல்வர் என எதிர்க்கட்சியினர் கிண்டலடித்தனர். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நிதீஷ் குமாருக்கு சற்று தெம்பு ஏற்பட்டது.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு அவசியம் என்ற நிலை உள்ளது. இதற்கு பரிசாக, சமீபத்திய பட்ஜெட்டில், பீஹார் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு, 26,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது, மத்திய அரசு.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள நிதீஷ் குமார், 'இனி யாரும் என்னை டம்மி முதல்வர் என கிண்டலடிக்க முடியாது...' என, உற்சாகமாக கூறி வருகிறார்.