PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

'தேவையில்லாத பீதியை கிளப்பி நம் பதவியை காலி செய்து விடுவர் போலிருக்கிறதே...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான பகவந்த் சிங் மான்.
டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின், தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம், பஞ்சாப் தான்.
தற்போது எந்தவித மான முக்கிய பதவியிலும் இல்லாத ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பார்வை, பஞ்சாப் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது.
'பகவந்த் மான் உட்பட, ஆம் ஆத்மியின் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எங்களுடன் தொடர்பில் உள்ளனர். பஞ்சாபில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், ஆட்சி எங்கள் வசம் வந்துவிடும்...' என, பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து பீதியை கிளப்பி வருகின்றனர்.
இதனால், பகவந்த் மான் மீது, கெஜ்ரிவாலின் சந்தேகப் பார்வை திரும்பி உள்ளது. 'ஒருவேளை பா.ஜ., தலைவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ...' என, கெஜ்ரிவால் தரப்பில்முணுமுணுக்கப்படுகிறது.
இதையடுத்து, பகவந்த் மானை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து, தானே முதல்வராகலாமா என தீவிரமாக யோசித்து வருகிறார், கெஜ்ரிவால்.
இதைக் கேள்விப்பட்ட பகவந்த் மான், 'நான் உண்டு, என் வேலை உண்டு என இருக்கிறேன். என் பதவியை பறிக்க இப்படி பல தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்துகின்றனரே...' என, புலம்புகிறார்.