PUBLISHED ON : மார் 01, 2026 03:03 AM

'ஒரு சிலர், தங்களது சுயநலத்துக்காக கட்சியை சீர்குலைக்கின்றனர்; இது எங்கு போய் முடியுமோ என தெரியவில்லை...' என்று, கொந்தளிக்கின்றனர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான விசுவாசிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய, அவரது உறவினர் அஜித் பவார், பின், அந்த கட்சியை கைப்பற்றினார்; இதனால், கட்சி இரண்டாக உடைந்தது.
சரத் பவார், தனி கட்சியாக செயல்பட்டு வருகிறார். மஹாராஷ்டிரா துணை முதல்வராக பதவி வகித்த அஜித் பவார், கடந்த ஜனவரியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் ஒன்றாக சேர்ந்து விடும் என எல்லாரும் நம்பினர். ஆனால், அவசரம் அவசரமாக அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை, மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவி ஏற்க வைத்தனர், அவரது ஆதரவாளர்கள். அடுத்தபடியாக, சுனேத்ராவை, தேசியவாத காங்கிரசின் தலைவராகவும் தேர்வு செய்தனர்.
அஜித் பவாரின் நெருங்கிய ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் தான், இதன் பின்னணியில் இருப்பதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது.
'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பர். அதுபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக இருந்தால் தான், சில சுயநலவாதிகளுக்கு கொண்டாட்டம் போலிருக்கிறது...' என புலம்புகின்றனர், அந்த கட்சியின் தொண்டர்கள்.

