PUBLISHED ON : ஏப் 20, 2024 12:00 AM

'ஏற்கனவே களம் நமக்கு சாதகமாக இல்லை; இதில் இந்த பிரச்னை வேறா...' என கவலைப்படுகிறார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
இங்கு, 25 லோக்சபா தொகுதிகளுடன் சேர்த்து, 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கஉள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் வகையில், ஜெகன்மோகன் ரெட்டி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இவருக்கு எதிராக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கரம் கோர்த்துள்ளன.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலை, கூட்டணி பலவீனம் ஆகிய பிரச்னைகள் ஜெகன்மோகனுக்கு எதிராக உள்ளன. ஆனாலும், முதல் கட்டத்திலேயே தேர்தல் நடந்து முடிந்து விடும் என கணக்கு போட்டு, வாக்காளர்களை திரட்டி வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்டிருந்தார், ஜெகன்.
எதிர்பாராத விதமாக, நான்காம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள மே 13ல் தான், ஆந்திராவிலும் ஓட்டுப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.
ஆந்திராவில் இயல்பாகவே வெயில் அதிகம் அடிக்கும். அதிலும், இந்த ஆண்டு ஆந்திராவில் வெப்ப அலை வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே மாதம் கடுமையான வெப்பம் நிலவும் சூழலில், வாக்காளர்கள் வீட்டை விட்டு வெளியில் வர மாட்டார்கள் என்ற கலக்கம், அரசியல்வாதிகளிடையே உள்ளது.
அதிலும், ஜெகன்மோகன் ரெட்டி, 'வெயிலில் வாக்காளர்களை திரட்டுவது நடக்காத காரியம். இருந்த ஒரே வாய்ப்பும் போய் விட்டதே...' என புலம்புகிறார்.

