PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

'லோக்சபா தேர்தல் முடிந்ததும் முடிவு தெரிந்து விடும்...' என ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. பா.ஜ., சார்பில் வசுந்தரா முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ., மேலிடம் புதுமுகமான பஜன்லால் சர்மாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது.
இதனால் ஏமாற்றம் அடைந்த வசுந்தரா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தற்போதைய லோக்சபா தேர்தலில் வசுந்தராவின் மகன் துஷ்யந்துக்கு, ஜால்வார் பரான் தொகுதியில் பா.ஜ.,வில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், தன் மகனுக்கு மட்டுமல்லாமல் மாநிலம் முழுதும் உள்ள பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக வசுந்தரா பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கிறது, கட்சி மேலிடம். ஒருவேளை தன் மகனுக்கு மட்டும் வசுந்தரா பிரசாரம் செய்தால், அவரை முழுமையாக ஓரம் கட்டவும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிகிறது.
'எது எப்படியோ, இந்த லோக்சபா தேர்தலுக்கு பின், வசுந்தராவின் அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்து விடும்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

