PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

'இவரை வைத்து அரசியலில் பெரிய பெரிய பதவிகளை அடையலாம் என நினைத்தால், இப்படி ஆகிவிட்டதே...' என, காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவை நினைத்து புலம்புகின்றனர், டில்லியில் உள்ள அவரது ஆதரவாளர்கள்.
காங்கிரசில், ராகுலுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும், பிரியங்காவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும்இயங்கி வருகின்றன. ராகுல் நேரடி அரசியலுக்கு வந்தபின், அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் பல முக்கிய பதவிகளை பெற்றனர். பிரியங்கா ஆதரவாளர்களும், அவரது நேரடி அரசியலை நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கடந்தாண்டு நடந்த, கேரள மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டு வெற்றி பெற்றதும், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
'இனி, முக்கிய பதவிகள் நம் கைக்கு வந்து விடும். கட்சியில் வேண்டியதை சாதிக்கலாம்...' என, அவர்கள் நினைத்தனர். ஆனால், பிரியங்காவோ, தன் தொகுதியான வயநாட்டின் மீது தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புக்கு நிதி வாங்கிக் கொடுப்பது, வனவிலங்குகளால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது ஆகியவற்றுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இதற்காக, ஒவ்வொரு வார இறுதியிலும் டில்லியிலிருந்து வயநாடுக்கு பறந்து விடுகிறார்.இதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், 'டில்லியில் ஆதிக்கம் செலுத்துவார் என பார்த்தால், வயநாட்டிலேயே வலம் வருகிறாரே...' என, கவலைப்படுகின்றனர்.