PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

'கடந்த முறை தான், அவர் நினைத்தது நடக்கவில்லை. இந்த முறையாவது நடக்குதா என பார்க்கலாம்...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதும், ஹைதராபாத்தெலுங்கானாவின் தலை நகராகி விட்டது. இதையடுத்து, ஆந்திராவுக்கு புதிய தலைநகரை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மாநிலம் இரண்டாக பிரிந்த பின் நடந்த முதல் சட்டசபை தேர்தலில், ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவர், அமராவதியில் பல ஆயிரம்கோடி ரூபாய் செலவில்புதிய தலைநகரை அமைக்க பெரும் முயற்சி செய்தார்.
ஆனால், அதற்குள் அடுத்த தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வராக பதவியேற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதி திட்டத்தை கிடப்பில் போட்டதோடு, மூன்று தலைநகரங்களை அமைக்கப் போவதாகவும் அறிவித்தார்.
அவரது திட்டமும் நிறைவேறவில்லை. இப்போது, மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வராகி விட்டார். இதையடுத்து, உலக வங்கி கடன் உதவியுடன், 60,000 கோடி ரூபாயில் மீண்டும் அமராவதியில் தலைநகரை அமைக்க முயற்சித்து வருகிறார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வந்து விடும் என்பதால், அதற்குள் தலைநகரை நிர்மாணித்து விட துடியாய் துடிக்கிறார். ஆந்திர மக்களோ,'சந்திரபாபு நாயுடுவின் கனவு நிறைவேறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்' என்கின்றனர்.