PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

'எங்கள் தலைவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது...' என கொந்தளிக்கின்றனர், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த பூஜா பால், சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெகுவாக பாராட்டி பேசினார்.
இதனால், கடுப்பான அகிலேஷ் யாதவ், பூஜா பாலை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 'அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூஜா பாலுக்கு சமூக ஊடகங்களிலும், தொலைபேசியிலும் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
'சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் சமூக ஊடகங்களில் என்னை மிரட்டுகின்றனர். எனக்கு ஏதாவது நேர்ந்தாலோ, நான் கொல்லப்பட்டாலோ அதற்கு அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதி கட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்...' என, போலீசில் புகார் அளித்துள்ளார், பூஜா பால்.
இதனால், கடுப்பான சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள், 'கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக பூஜா பால் நீக்கப்பட்டார். அதற்காக, அவருக்கு வரும் மிரட்டல்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? உ.பி.,யின் வருங்கால முதல்வர் அகிலேஷை கொலை முயற்சி வழக்கில் சிறையில் தள்ள சதி நடக்கிறது...' என, புலம்புகின்றனர்.