PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

'இவர் செய்வதெல்லாம் அநியாயமாக இருக்கிறது...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை குறை கூறுகின்றனர், இங்குள்ள அரசு ஊழியர்கள்.
தெலுங்கானாவில், முந்தைய முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சியில் ஆடம்பர செலவுகள் அதிகம் செய்யப்பட்டதால்,கடும் நிதி நெருக்கடிஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.
இதனால், 'கடுமையான சிக்கன நடவடிக்கை மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை...' என அறிவித்துள்ளார், முதல்வர் ரேவந்த் ரெட்டி.
முதற்கட்டமாக, அவரது பார்வை அரசு ஊழியர்கள் பக்கம் திரும்பி உள்ளது. சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அடுக்கடுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
'அரசு அதிகாரிகள், ஊழியர்கள் எந்தவித ஆடம்பரமான பயணமும் மேற்கொள்ளக் கூடாது. அதிக விலையுள்ள சொகுசு கார்களை வாங்கக் கூடாது...' என, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது, மின் விசிறி, 'ஏசி' மற்றும் விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்ல வேண்டும்...' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளால் எரிச்சல் அடைந்துள்ள அரசு ஊழியர்கள், 'சிக்கன நடவடிக்கைகளை நாங்கள் மட்டும் தான் கடைப்பிடிக்க வேண்டுமா... முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களின் ஆடம்பர செலவுகளுக்கு கிடுக்கிப்பிடி போட்டாலே, கணிசமான தொகையை சேமிக்க முடியுமே...' என, புலம்புகின்றனர்.