PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

'அதிகாரத்துக்கு புதியவர் என்றாலும், எப்படி அந்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக விரைவாகவே கற்று தேர்ந்து விட்டாரே...' என, ஒடிசா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் சரண் மஜி பற்றி அனைவரும் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.
ஒடிசாவில், கடந்த ஜூனில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் பல மூத்த தலைவர்கள், முதல்வர் பதவியை ஏற்க தயாராக இருந்த நிலையில், நிர்வாகத்தில் அதிக அனுபவம் இல்லாத மோகன் சரண் மஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
'இவர் எப்படி ஆட்சிநடத்தப் போகிறாரோ...?' என, அனைவரும் கவலைப்பட்டனர். துவக்கத்தில் தடுமாறினாலும், இப்போது சுதாரித்து, சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்.
புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவிலுக்கு யாத்திரை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளார். தன்னை விட வயதில் மூத்த பெண்களை பார்த்தால், உடனடியாக அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.
இதை பார்க்கும் சக அரசியல்வாதிகள், 'பெண்களின் ஓட்டுகளை தக்க வைத்தால், நீண்ட நாட்களுக்கு முதல்வராக இருக்கலாம் என்ற வித்தை இவருக்கும் தெரிந்து விட்டது போலிருக்கிறது...' என்கின்றனர்.

