PUBLISHED ON : மார் 15, 2026 02:01 AM

'அமைச்சர்களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது...' என, கவலைப்படுகின்றனர், கர்நாடக மாநில அமைச்சர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பதிலளிப்பது குறித்து விவாதிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய், அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதி திட்டங்களுக்கே அரசின் பெரும்பாலான நிதி செலவிடப்படுவதால், தங்கள் தொகுதிகளுக்கு தேவையான நிதி கிடைப்பது இல்லை என கவலை தெரிவித்தனர்.
மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள், 'நாங்கள் போன் செய்தால் அமைச்சர்கள் எடுப்பதே இல்லை; அவர்களை சந்தித்து எங்கள் பிரச்னைகளை கூற முடியவில்லை; இப்படிப்பட்ட அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, எங்களை போன்றவர்களை அமைச்சராக்குங்கள்...' என ஆவேசப்பட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த சித்தராமையா, அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, கூட்டத்தை முடித்து வேகமாக வெளியேறினார்.
சித்தராமையா ஆதரவாளர்களோ, 'எங்கள் தலைவரே, முதல்வர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார். இந்த லட்சணத்தில், அமைச்சர் பதவிக்கு அடிதடி நடக்குதே...' என புலம்புகின்றனர்.

