PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

'எதைச் செய்தாலும், பலமுறை யோசித்து செய்ய வேண்டும்...' என, கேரள மாநில காங்கிரசார் குறித்து கடுப்புடன் கூறுகின்றனர், இடதுசாரி கட்சியினர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்குள்ள வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவில், இரண்டு கிராமங்கள் முற்றிலும் அழிந்து போயின. 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர்;ஏராளமானோர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் களம் இறங்கி உள்ளன. பிரியாணி, தேங்காய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் தொகையை நிவாரண
நிதியாக பல அமைப்புகள் வழங்கி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியினர், பயன்படுத்தாத பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து, அந்த தொகையை நிவாரண நிதியாக வழங்கினர்.
இதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியினர், 'கொரோனா காலத்தின் போது வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இதேபோல் பழைய இரும்புகளை சேகரித்து, அதை விற்று கிடைத்த பணத்தை மக்களுக்கு அளித்தோம்.'அப்போது எங்களை, 'காயலான் கடை பார்ட்டி' என, காங்கிரசார் கிண்டல் அடித்தனர். இப்போது அவர்களே காயலான் கடை பார்ட்டியாக மாறியுள்ளனர். இப்போது நாங்கள் கிண்டலடித்தால் சரியாக
இருக்குமா...' என, பொருமுகின்றனர்.

