PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

'இது நல்ல காமெடியாக இருக்கிறதே; கவலையாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நினைத்து சிரித்து, மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்...' என, ஆந்திராவில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், அம்மாநில மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அம்மாநில மனிதவளத் துறை அமைச்சராக உள்ளார்.
ஆந்திராவை, சர்வதேச அளவில் சிறந்த தகவல் தொழில்நுட்ப மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் லோகேஷ் உறுதியாக இருக்கிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச் சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பேசிய லோகேஷ், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, 'அண்ணா' என்று அழைத்தார். இவருக்கு பின் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், லோகேஷை, 'அண்ணா' என்றே அழைத்தார்.
உண்மையில், லோகேஷை விட, அஸ்வினி வைஷ்ணவ், 13 வயது மூத்தவர். அப்படியிருக்கும்போது, லோகேஷை ஏன் அண்ணா என்று அழைத்தார் என, மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர்.
'இருவரும் தே.ஜ., கூட்டணி கட்சியினர் என்பதால் அப்படி அழைத்திருக்கலாம்; ஆனாலும், இவர்களின் பாசப் போராட்டத்துக்கு ஒரு அளவு இல்லையா...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.

