PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

'நல்ல ஐடியா தான்...' என, மத்திய விவசாயத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் குறித்து கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
மத்திய பிரதேச முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்த பெருமைக்குரியவர், சிவ்ராஜ் சிங் சவுகான். கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றும், சவுகானுக்குமுதல்வர் பதவி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான், லோக்சபா தேர்தல்முடிந்ததும், மோடியின் மூன்றாவது அரசில், விவசாயத் துறை அமைச்சராக சவுகான் நியமிக்கப்பட்டார். பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மத்திய அரசு மீது அதிருப்தியில்உள்ளனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார், சவுகான். 'இனி டில்லியில் உள்ள என் வீட்டில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் விவசாயிகளின் குறைகளை கேட்க உள்ளேன்.
'விவசாயிகள் அந்த நாளில் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். விவசாயிகளுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன்...' என, தெரிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை கேள்விப் பட்ட சக அரசியல்வாதிகள், 'சவுகான் எப்போதுமே, யாரிடமும் நெருங்கி பழகக் கூடியவர். இப்போது விவசாயிகளிடம் நெருங்கி பழகி, அரசின் மீதான அவர்களது அதிருப்தியை குறைக்க திட்டமிட்டு உள்ளார்; இது, பாராட்டத்தக்க முயற்சி தான்...' என்கின்றனர்.