PUBLISHED ON : ஜூலை 29, 2026 12:00 AM

'பெரிய மனிதர் விரக்தியில் பேசுகிறார்; அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை...' என, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா குறித்து பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் சிவகுமார். சமீபத்தில் தான், அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
சித்தராமையா சமீபத்தில் ஒரு விழாவில் பேசுகையில், 'கர்நாடகாவில் அடுத்த சட்டசபை தேர்தல், 2028ல் நடக்கவுள்ளது. அப்போது எனக்கு, 8௦ வயதாகி விடும். மேலும், இப்போது அரசியலில் ஊழல் அதிகரித்து விட்டது. அரசியல் வாதிகளிடம் நேர்மையில்லை. அதனால், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன்...' என்றார்.
கர்நாடக காங்., நிர்வாகிகளோ, 'எல்லா வசதிகளையும், சலுகைகளையும் சித்தராமையா அனுபவித்து முடித்து விட்டார். அதிகாரம் மிக்க முதல்வர் பதவியில் இருந்து விட்டு, இப்போது பதவியில்லாமல் இருப்பதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், அரசியலில் நேர்மையில்லை என உளறுகிறார். பதவியில் இருந்தபோது, இதெல்லாம் அவருக்கு தெரியவில்லையா; இப்போது தான் தெரிகிறதா...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.
