PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

'எவ்வளவு பெரிய மனிதர்; இவரை இப்படி நடத்துகின்றனரே...' என, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் பற்றி கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், நவீன் பட்நாயக். இவருக்கு, 79 வயதாகிறது. ஒடிசாவை தொடர்ச்சியாக, 24 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.
'தோற்கடிக்கமுடியாதவர்' என, பெயர் எடுத்திருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில்இவரது கட்சி, பா.ஜ.,விடம் ஆட்சியைபறிகொடுத்தது.
இப்போது, பா.ஜ.,வின் மோகன் மஜி முதல்வராக உள்ளார். இவர், முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததுமே, அதிரடியாக பலசீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
தற்போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை குறைத்துள்ளார். முன்னாள் முதல்வரான நவீன் பட்நாயக்கிற்கு, 24 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அவர் எங்கு சென்றாலும், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். ஆனால், தற்போது இவரது பாதுகாப்புக்கு, இரண்டு போலீசார் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இதை, பிஜு ஜனதா தளம் கட்சி நிர்வாகிகளால் ஜீரணிக்க முடியவில்லை. 'இந்த மாநிலத்தை, 24 ஆண்டுகள் ஆட்சி செய்தவரை இப்படி அவமதிக்கலாமா...' என, கண்ணீர் சிந்துகின்றனர்.