PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

'அவரும் எவ்வளவு நாளைக்கு தான் பொறுமையாக இருப்பார்...' என, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார் பற்றி கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
சரத் பவார், மஹாராஷ்டிராவில் செல்வாக்குள்ள அரசியல்வாதி. மஹாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர் என, பல முக்கிய பதவிகளை வகித்தவர்.
துவக்கத்தில் காங்கிரசில் இருந்த இவர், பின், தனிக்கட்சி துவங்கினார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்தார். எப்போதும் பா.ஜ., கூட்டணிக்கு சென்றதே இல்லை.
ஆனால், தொடர் தோல்விகள், விரக்தி, துரோகம் போன்ற விஷயங்கள், சரத் பவாரின் மனதை மாற்றியுள்ளன. இவரது உறவினரான அஜித் பவார், தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்து, கட்சியை கைப்பற்றி விட்டார்.
இந்த துரோகத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சரத் பவார் அணி மண்ணை கவ்வியது. இதையடுத்து, 'இண்டியா' கூட்டணியில் காங்கிரசுடன் பயணிப்பதற்கு பதிலாக, பா.ஜ.,வுடன் கைகோர்க்கலாம் என்ற முடிவுக்கு சரத் பவார் வந்து விட்டார் போலிருக்கிறது.
சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புகழ்ந்து பேசினார்.
இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், 'பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தால், ஜனாதிபதி பதவி கிடைக்கும் என சரத் பவார் நினைக்கிறாரோ, என்னவோ...' என, 'பொடி' வைத்து பேசுகின்றனர்.