PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

'இதையெல்லாம் நம்ப முடியாது. இதை வைத்து எந்த முக்கிய முடிவையும் எடுக்கக் கூடாது...' என, கர்நாடகாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவருக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்.
கடந்த, 2015ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு தயார் செய்த அறிக்கைதான், தற்போது கர்நாடகாவில் புயலை கிளப்பி உள்ளது.
கர்நாடக அரசியலில் லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதிக்கம் அதிகம். இதுவரை இங்கு முதல்வர்களாக பதவி வகித்தவர்களில், இந்த இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம்.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள, 33 பேரில், 13 பேர் இந்த இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான். துணை முதல்வர் சிவகுமார் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பில் இந்த இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், முதல்வர் சித்தராமையாவின் குருபர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
'இது அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு இல்லை. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது...' என, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

