PUBLISHED ON : மார் 09, 2026 01:20 AM

'அரசியல்வாதிகள், ரவுடிகள் போல் பேசுவது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல...' என கவலைப்படுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியை தக்க வைக்க, முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
அவரிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறிக்க, பா.ஜ., தலைவர்களும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆவேசமும் அதிகரித்து வருகிறது.
திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., கல்யாண் பானர்ஜி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான தன் எதிர்ப்பை பதிவு செய்ய, முதல்வர் மம்தா கடந்த மாதம் டில்லி சென்றார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்தித்து முறையிட்ட மம்தாவை நோக்கி, அவர் விரலை உயர்த்தி பேசினார். ஞானேஷ் குமார் அரசியலமைப்பு பதவியில் இல்லாமல் இருந்தால் அவரது விரலை வெட்டியிருப்பேன்...' என்றார்.
அவரது இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'எம்.பி., பதவி வகிக்கும் ஒருவர், தேர்தல் கமிஷனரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதை எப்படி ஏற்க முடியும்; இந்த ஆபத்தான அரசியல் எங்கு போய் முடியுமோ என தெரியவில்லை...' என்கின்றனர், மேற்கு வங்க மக்கள்.

