PUBLISHED ON : ஏப் 23, 2025 12:00 AM

'காங்கிரசில் வயதான தலைவர்களுக்கு இனி சிக்கல்தான் போலிருக்கிறது...' என, அந்த கட்சி வட்டாரத்தில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், சமீபத்தில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடந்தது. குஜராத்தில், 25 ஆண்டுகளாக பா.ஜ., தான் ஆளுங்கட்சியாக உள்ளது.
காங்கிரசின் தொடர் தோல்விகளால் இங்குள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்துஉள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே, குஜராத்தில் செயற்குழு கூட்டத்தைக் கூட்டியது காங்கிரஸ் மேலிடம்.
இந்த கூட்டத்தின்போது, சச்சின் பைலட், கவுரவ் கோகோய் போன்ற இளம் தலைவர்கள் ஒரு பிரிவாகவும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா போன்ற மூத்த தலைவர்கள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டனர்.
இரு பிரிவினரும் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசுவதை தவிர்த்தனர். மூத்த தலைவர்களான அசோக் கெலாட்டும், பூபிந்தர் சிங் ஹூடாவும் தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இருவரது முகங்களிலும் மருந்துக்கு கூட சிரிப்பு இல்லை; இறுகிய முகங்களுடன் சோகமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த காங்., இளம் தலைவர்கள், 'இவர்களுக்கு இனிமேல் கட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்படாது என்பது உறுதியாக தெரிந்து விட்டது போலிருக்கிறது; அதனால் தான், இருண்ட முகங்களுடன் காணப்படுகின்றனர்...' என, கிண்டல் அடித்தனர்.