PUBLISHED ON : ஏப் 28, 2026 01:02 AM

'தேர்தல் முடிவதற்குள் பதவிக்கு, 'துண்டு' போடும் வேலை துவங்கி விட்டதே...' என, ஆச்சரியப் படுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள மம்தா பானர்ஜி, நான்காவது முறையாகவும் வெற்றி பெற்று, பதவியை தக்க வைக்க முயற்சித்து வருகிறார்.
இங்கு, முதல் கட்ட சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மம்தாவுக்கு, பா.ஜ.,வினர் கடும் சவாலாக உள்ளனர். எப்படியாவது மம்தாவிடம் இருந்து ஆட்சியை பறிக்க வேண்டும் என்ற முடிவுடன், பா.ஜ., தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆனால், திரிணமுல் காங்கிரசிலோ, சத்தமில்லாமல் ஒரு விஷயம் அரங்கேறி வருகிறது. 'மம்தாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. திரிணமுல் காங்., வெற்றி பெற்றாலும், அவர் முதல்வராக பதவியேற்க மாட்டார்...' என்று, அந்த கட்சியில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதனால், முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு, மம்தாவின் உறவினரும், திரிணமுல் காங்., கட்சியின் பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், இப்போதே ரகசிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிணமுல் காங்., தொண்டர்களோ, 'மம்தா தீவிர அரசியலில் இருக்கும்போதே, அவருக்கு எதிராக குழி பறிக்கும் வேலையை துவங்கி விட்டனரே...' என்று கவலைப்படுகின்றனர்.

